கொழும்பை வந்தடைந்த இந்திய கடற்படையின் நீர் மூழ்கி கப்பல் : பொதுமக்கள், மாணவர்கள் பார்வையிட சந்தர்ப்பம் - News View

About Us

About Us

Breaking

Monday, June 19, 2023

கொழும்பை வந்தடைந்த இந்திய கடற்படையின் நீர் மூழ்கி கப்பல் : பொதுமக்கள், மாணவர்கள் பார்வையிட சந்தர்ப்பம்

இந்திய கடற்படையின் நவீன தயாரிப்பான கல்வாரி வகை நீர் மூழ்கி கப்பலான வாஹிர் இன்று (19) முதல் 22 ஆம் திகதி வரை கொழும்புக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

இவ்விஜயத்தின் ஓர் அங்கமாக குறித்த இந்திய கடற்படை நீர் மூழ்கி கப்பலின் கட்டளைத் தளபதி திவாகர் எஸ் அவர்கள் மேற்கு கடற் பிராந்திய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஸ் டி சில்வா அவர்களை சந்திக்கவுள்ளார்.

அத்துடன் குறித்த நீர் மூழ்கி கப்பலை பொதுமக்களும் பாடசாலை மாணவர்களும் பார்வையிட முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.

“பூகோள சமுத்திர வளையம்” எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படும் சர்வதேச யோகா தினத்தின் 9ஆவது பதிப்பினை அனுஷ்டிக்கும் முகமாக இக்கப்பல் இலங்கை வந்துள்ளதாக, இந்திய உயர் ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்துடன் இணைந்து இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஒழுங்குசெய்துள்ள பாரிய நிகழ்வொன்றும் 2023 ஜூன் 21 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் நடைபெறவுள்ளதுடன் இந்நிகழ்வில் இந்திய மற்றும் இலங்கை கடற்படைகளின் உயரதிகாரிகள் மற்றும் சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.
உலகளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட துறைமுகங்களை இணைத்து “பூகோள சமுத்திர வளையம்” என்ற வலையமைமைப்பை நிறுவும் தனித்துவமிக்க முன்னெடுப்பாக நடைபெறும் இந்த யோகா அமர்வுகளில் இந்தியக் கடற்படையினர் பங்கேற்கின்றனர், அத்துடன் இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்துக்கான தொனிப்பொருளான “வசுதைவ குடும்பகம்” அல்லது “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” ஆகியவற்றை எதிரொலிக்கும் வகையில் பொது ஆரோக்கியம் என்ற அடிப்படையில் உலகெங்கிலுமுள்ள மக்களை யோகா ஒன்றிணைக்கின்றது,

இதேபோல அண்மையிலும் இந்தியக் கடற்படைக் கப்பல்களான டில்லி, சுகன்யா, கில்தான் மற்றும் சாவித்ரி ஆகியவையும் இவ்வருட முற்பகுதியில் கொழும்பு மற்றும் திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததுடன் இலங்கை கடற்படையுடன் இணைந்து யோகா அமர்வுகளும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தமை நினைவில்கொள்ளத்தக்கது.

அண்மையில், 2023 ஜூனில், சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தால் இலங்கையின் ஐந்து நகரங்களில் மூன்று நாள் யோகா பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டதுடன் இதில் இலங்கை ஆயுதப் படையினர் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் கொள்கையான அயலுறவுக்கு முதலிடம் கொள்கை மற்றும் ‘பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பும் வளர்ச்சியும் (SAGAR)’ ஆகியவற்றின் அடிப்படையில் இரு அயல் நாடுகளினதும் கடற்படைகளுக்கு இடையே சகோதரத்துவத்தையும் ஒற்றுமையையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டே இந்திய கடற்படை கப்பல்கள் மற்றும் நீர் மூழ்கிக் கப்பல்கள் இலங்கைக்கு விஜயங்களை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment