கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஊடாக பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நாம் நடைமுறைப்படுத்தியிருந்தால், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேசத்தின் அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டிருக்காது. எவ்வாறிருப்பினும் காலத்தின் தேவைக்கேற்ப புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவதில் எவ்வித சிக்கலும் இல்லை என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிரயோகத்தை நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளமை குறித்து வினவியபோது இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், வடக்கில் காணப்பட்டாலும், தெற்கில் காணப்பட்டாலும் பயங்கரவாத செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது. பயங்கரவாதிகளுக்கு நாட்டில் ஆதிக்கம் செலுத்த இடமளிக்க முடியாது.
தற்போது இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை விட, உலகலாவிய ரீதியில் பயங்கரவாத செயற்பாடுகள் மாற்றமடைந்துள்ளன.
அவர்களின் ஆயுதங்கள், உபகரணங்கள் மாற்றமடைந்துள்ளன. இவற்றுக்கு பொறுத்தமான சட்ட திருத்தங்கள் அல்லது புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவதில் எவ்வித சிக்கலும் இல்லை.
இதனை விட கடுமையான சட்டங்களே ஏனைய நாடுகளில் காணப்படுகின்றன. பிரித்தானியாவில் மிகக் கடுமையான சட்டம் நடைமுறையிலுள்ளது.
மனித உரிமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் எமக்கெதிராக கோஷமெழுப்பும் நாடுகளில் பயங்கரவாதத்துக்கு எதிராக மிகக்கடுமையான சட்டங்களல்லவா நடைமுறையிலுள்ளன? பின்லாடனை தேடிச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதல்லவா?
எம்மிலும் குறைபாடுகள் உள்ளன. 2010 இல் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நிறுவப்பட்டது. அந்த ஆணைக்குழுவின் ஊடாக பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நாம் நடைமுறைப்படுத்தியிருந்தால் இவ்வாறான அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டிருக்காது. ஆனால் நாம் அதனை செய்யவில்லை என்றார்.
No comments:
Post a Comment