வெளிநாடுகளுக்கோ, வெளிப்பிரதேசங்களுக்கோ செல்லக்கூடாது : முக்கிய சந்திப்பிற்கு தயாராகிறார் ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Monday, June 26, 2023

வெளிநாடுகளுக்கோ, வெளிப்பிரதேசங்களுக்கோ செல்லக்கூடாது : முக்கிய சந்திப்பிற்கு தயாராகிறார் ஜனாதிபதி

(எம்.மனோசித்ரா)

அமைச்சர்கள் உட்பட ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த எந்தவொரு காரணத்துக்காகவும் வெளிநாட்டு பயணங்களையும், கொழும்பிலிருந்து வெளிப்பிரதேசங்களுக்கான பயணங்களையும் தவிர்த்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 28ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் ஜனாதிபதி செயலகத்தில் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பையடுத்து இம்மாதம் 30, ஜூலை 1 மற்றும் 2ஆம் திகதிகளில் ஆளுந்தரப்பு எம்.பி.க்களை கொழும்பிலிருந்து வெளியேற வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு ஜனாதிபதியால் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான அறிவித்தல் வெளியிடப்படக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இது தொடர்பில் பாராளுமன்ற ஒழுங்குபத்திரத்தில் உள்ளடக்கப்படவில்லை.

சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டு ஒப்பந்தத்துக்கமைய அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள நிபந்தனைகள் குறித்த மீளாய்வு எதிர்வரும் செப்டெம்பரில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் நிதி அமைச்சின் சார்பில் வழங்கப்பட வேண்டிய தெளிவுபடுத்தல்களை அடிப்படையாகக் கொண்டே இந்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன சார்பில் அமைச்சுப் பதவிகளுக்கான கோரிக்கை ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும், ஜனாதிபதியிடமிருந்து இதற்கான பதில் வழங்கப்படாத நிலையில், இது குறித்தும் புதனன்று இடம்பெறவுள்ள சந்திப்பில் அவதானம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமகால அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து ஆளுங்கட்சியினரோடு மாத்திரமின்றி எதிர்க்கட்சிகளுடனும் சந்திப்புக்கள் இடம்பெறவுள்ளமையால் அடுத்த வார இறுதியில் வெளிநாட்டு பயணங்களை தவிர்க்குமாறும், அத்தியாவசிய காரணிகளுக்காக செல்வதாயின் அது தொடர்பில் அறியத்தருமாறும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment