குருந்தூர் மலை, திரியாய விடயத்தில் தேரர்களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து தீர்க்கமாக எடுக்கப்பட்ட முடிவுகளை மாற்றி தமிழர்களை தொடர்ந்தும் ஏமாற்றாதீர்கள் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் தமிழ்த் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன், புளொட் தலைவர் சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரே மேற்கண்டவாறு வலியுறுத்தலைச் செய்துள்ளனர். இவ்விடயம் தொடர்பில் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,
மாவை.சோ.சேனாதிராஜா தெரிவிக்கையில், எமது சந்திப்பின்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குருந்தூர் மற்றும் திரியாய விகாரைகளுக்கு அருகில் உள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்குமாறே உத்தரவு பிறப்பித்திருந்தார். அவ்வாறான நிலையில் தற்போது அந்த தீர்மானத்துக்கு என்ன நடந்துள்ளது என்பது தொடர்பில் எதிர்வரும் திங்களன்று கொழும்பில் கூடவுள்ள எமது அரசியல்பீடம் ஆராயவுள்ளது.
அதன் பின்னர் நாம் ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் கேள்விகளைத் தொடுக்கவுள்ளோம். அவர் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதுள்ளமை தொடர்பில் மிகுந்த கரிசனை எடுக்கவுள்ளோம் என்றார்.
சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பதாக அறிவித்துள்ளார். ஆனால், தற்போது எல்லாவல மேதானந்த தேரர் அவற்றை குழப்பியடிக்கும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளமை கண்டிக்கத்தக்கதாகும்.
என்னை பொறுத்த வரையில், எல்லாவல மேலானந்த தேரர் உள்ளிட்டவர்கள் பௌத்த சமயத்தின் வரலாற்றை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.
கி.பி. 6ஆம், 7ஆம் நூற்றாண்டுகளிலேயே சிங்கள மொழி வந்தது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். வரலாறு அவர்களுக்கு கசப்பானதாக இருக்கின்றது. தமிழ் பௌத்தர்கள் இருந்துள்ளார்கள் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்வதற்கு தயாரில்லை.
ஆகவே, வரலாற்றை மாற்றி, பின்னர் அதனடிப்படையில் தமிழர்களுக்குச் சொந்தமான பகுதிகளை கையகப்படுத்த முனைவது ஆக்கிரமிப்பாகும். ஆகவே இந்த விடயங்களில் ஜனாதிபதி ரணில் தீர்க்கமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.
செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்கையில், குருந்தூர் மலையில் உள்ள விகாரைக்குச் சொந்தமில்லாத 229 ஏக்கர்களையும் விடுவிப்பதற்கு வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் உள்ளது. அந்தக் கூட்டத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் வருகை தந்திருந்தார்.
அதன் பின்னர், எம்முடன் நடத்திய சந்திப்பின்போதும் அதற்கான உத்தரவாதத்தினை அவர் வழங்கியிருந்தார். தற்போது அந்த உத்தரவாதங்களுக்கு நேரெதிராக அவர் செயற்பட முனைவதானது கண்டிக்கத்தக்கதாகும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு உத்தரவாதங்களை வழங்குவதும் பின்னர் தேரர்களுக்கு அடிபணிந்து அவற்றை பின்வாங்குவதும்தான் தொடர்ச்சியாக நடைபெறுகின்றது. ஆகவே அவர் இவ்வாறான மாறுபட்ட செயற்பாடுகளை தவிர்த்து நேர்மையாக நடக்க வேண்டும் என்றார்.
சித்தார்த்தன் தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கில் இனப் பிரச்சினையானது தற்போது மதப் பிரச்சினையாக உருவெடுக்கும் ஆபத்துக்கள் தோன்றியுள்ளன. உண்மையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு லிபரல் முகம் காணப்படுகின்றபோதும் அவர் பெரும்பான்மை மக்களின் ஆதரவினைப் பெற்றவராக உள்ளார். ஆகவே அவர் தனது தேர்தல் அரசியலை மையப்படுத்தியே ஏனைய பெரும்பான்மையினத் தலைவர்கள் போன்றே செயற்படுகின்றார். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.
உண்மையில், இந்துக்களோ தமிழர்களோ பௌத்தத்துக்கு எதிரான மனோநிலைமையைக் கொண்டிருக்கவில்லை. கோட்பாட்டு ரீதியாக இவ்விரு சமயங்களுக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படவில்லை.
ஆனால், வன இலாகா, தொல்பொருள் போன்ற விடயங்களை மையப்படுத்தி ஆக்கிரமிக்கப்படும் காணிகளில் பௌத்த அடையாளங்களை நிறுவி அங்கு வலிந்து குடியேற்றங்களைச் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஆகவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேரர்களின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறில்லாவிட்டால், இனப் பிரச்சினைக்கான தீர்வினை காண்பது மிகக்கடினமானதாக இருக்கும் என்றார்.
சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சிக் காலத்திலும் இவ்விதமான செயற்பாட்டையே மேற்கொண்டார். அவர் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக அறிவித்துவிட்டு, பின்னர் மைத்திரியை வீழ்த்தும் செயற்பாட்டினையே முன்னெடுத்தார். இதற்கிடையில் வடக்கில் ஆயிரம் பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதற்கான ஒதுக்கீடுகளையும் செய்தார்.
அதேநேரம், படையினர் ஊடாக விகாரைகளை அமைக்கும் பணிகளையும் அவர் தடுக்கவில்லை. இந்த நிலைமைகளால்தான் தற்போது வரையில் பிரச்சினைக்கான தீர்வு உரிய வகையில் காணப்படாமல் இருக்கும். ஆனால், தொடர்ச்சியாக தமிழர்களை ஏமாற்றும் செயற்பாடுகள்தான் நடைபெறுகின்றன.
குருந்தூர் மலை விகாரை விடயத்தில் நீதிமன்றத்தின் கட்டளையை மீறியே அந்த விகாரை கட்டப்பட்டது. அதேநேரம், 1933ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், அங்கு 78 ஏக்கர்கள்தான் விகாரைக்கு சொந்தமானதாக கூறப்படுகின்றது.
அங்கு தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகளும் உள்ளன. அவ்வாறு இருக்கின்றபோது அந்த மக்களை வெளியேற்றி 300 ஏக்கர்கள் வரையில் தற்போது சுவீகரிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த விடயத்தில் ரணில் விக்கிரமசிங்க பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment