பாறுக் ஷிஹான்
நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருட்களை நுட்பமாக விநியோகித்து வந்த இரு சந்தேக நபர்களை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம், கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரீ.எச்.டி.எம்.எல்.புத்திகவின் வழிநடத்தலில் சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.சம்சுதீன் நெறிப்படுத்தலில் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய போதைப் பொருள் தடுப்புப்பிரிவுப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ரவூப் உள்ளிட்ட குழுவினர் மேற்குறித்த இரு சந்தேக நபர்களையும் மாறுவேடத்தில் சென்று கைது செய்துள்ளனர்.
இக்கைது நடவடிக்கை கடந்த புதன்கிழமை (31) இரவு கல்முனை, மாதவன் வீதியில் வைத்து மேற்கொள்ளப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்கள் வசமிருந்து ஹெரோயின் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
மேலும் 3 கிராம் 170 மில்லி கிராம் ஹேரோயின் பொதி செய்யப்பட்ட நிலையில் சந்தேக நபர்கள் வசமிருந்து மீட்கப்பட்டுள்ளதுடன், அவை சிறு சிறு பக்கற்றுக்களில் பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிக்க பொதி செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வீடுகளில் சிலர் வளர்ப்பு புறாக்களினூடாக போதைப் பொருட்களைக் கடத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக சாய்ந்தமருது பொலிஸாரிடம் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
No comments:
Post a Comment