(எம்.மனோசித்ரா)
குடும்ப ரீதியில் வரவு செலவுகளை மதிப்பீடு செய்து அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் பயனாளர்களை உள்வாங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்திட்டத்தில் உள்வாங்கப்படாத, ஆனால் வறுமை நிலையிலுள்ள மக்களுக்காக போராடுவதற்கு தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வீரவில கிரிதிஓயா ஒன்றிணைந்த விவசாயிகள் அமைப்பின் விவசாய தலைவர்களுடனான சந்திப்பின்போது இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ஒவ்வொரு குடும்பத்திலும் வரவு செலவினை மதிப்பிடாமல் எவ்வாறு அஸ்வெசும திட்டத்துக்கு பயனாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர்? லேர்ன் ஏசியா என்ற நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் இலங்கையில் 14 சதவீதமாகக் காணப்பட்ட வறுமை நிலை 31 சதவீதமாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப நாட்டில் 70 இலட்சம் மக்கள் வறுமை நிலையிலுள்ளனர்.
எவ்வித பேதமும் இன்றி வறுமை நிலையிலுள்ளவர்களை தேர்ந்தெடுத்து, இந்த வேலைத்திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததன் காரணமாகவே மக்கள் வீதிக்கிறங்கி போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
வரவு செலவுகளை மதிப்பீடு செய்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு நாம் வலியுறுத்துகின்றோம். வறுமை நிலையிலுள்ள பலரும் அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்படவில்லை. அவர்களுக்காக போராடுவதற்கு நாம் தயாராகவுள்ளோம்.
அதேபோன்று இடைநிறுத்தப்பட்டுள்ள திரிபோஷா வழங்கும் திட்டத்தையும் அரசாங்கம் விரைவில் ஆரம்பிக்க வேண்டும். மக்கள் உயிர்வாழ்வதற்கான உரிமையை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment