225 பேரும் வேண்டாமெனக் கூறினால் செவிசாய்க்க வேண்டியேற்படும் : எஸ்.எம். மரிக்கார் - News View

About Us

About Us

Breaking

Monday, June 26, 2023

225 பேரும் வேண்டாமெனக் கூறினால் செவிசாய்க்க வேண்டியேற்படும் : எஸ்.எம். மரிக்கார்

(எம்.மனோசித்ரா)

பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் இணைந்து தேசிய கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டாமெனக் கூறினால், அரசாங்கத்துக்கு அந்த கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டியேற்படும். அவ்வாறில்லை எனில் அரசாங்கம் தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் காணப்படும் கடுமையான நிபந்தனைகளை நீக்குவது குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசிய கடன் மறுசீரமைப்பு எவ்வாறு முன்னெடுக்கப்படவுள்ளது என்பது யாருக்கும் தெரியாது. பாராளுமன்ற உறுப்பினர்களான எமக்கும் தெரியாது. மத்திய வங்கியின் நிதிச் சபை உறுப்பினர்களுக்கும் தெரியாது.

கடந்த வாரம் குறித்த அதிகாரிகள் பாராளுமன்ற மேற்பார்வை குழுவுக்கு அழைக்கப்பட்டனர். எனினும் அவர்கள் தமக்கு எந்தத் தகவலும் தெரியாது எனக் கூறுகின்றனர். ஆனால் ஜனாதிபதியின் அமைச்சரவைக்கு இது தொடர்பில் தெரியும்.

தேசிய கடன் மறுசீரமைக்கப்பட்டால் அது ஊழியர் சேமலாப நிதியத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்த மதிப்பீடும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை. மத்திய வங்கி ஆளுனர் இது தொடர்பில் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு பொறுப்பான நிதி சபையுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவில்லை.

225 பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து தேசிய கடன் மறுசீரமைப்பினை மேற்கொள்ள வேண்டாம் எனக் கூறினால், அரசாங்கத்துக்கு அந்த கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டியேற்படும். அல்லது தேசிய கடன் மறுசீரமைப்பு குறித்த கடுமையான நிபந்தனைகளை நீக்குமாறு சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment