பாறுக் ஷிஹான்
மாட்டிறைச்சியினை சாப்பிடுவது சம்பந்தமாக பொதுமக்கள் எந்தப்பீதியும் அடையத் தேவையில்லை என நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.எல்.எம்.றயீஸ் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள மாடுகளுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்றுநோய் மற்றும் இறைச்சிப் பாவனை சம்பந்தமாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, மாடுகள் அறுக்கின்றபோது பிரதேச சபை, கால்நடை வைத்திய அதிகாரி பணிமனை, சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உள்ளிட்ட மூன்று நிறுவனங்களும் அக்கறையுடன் செயற்படுவதனால் மாட்டிறைச்சியினை சாப்பிடுவது சம்பந்தமாக பொதுமக்கள் எந்தப்பீதியும் அடையத் தேவையில்லை.
இதேவேளை, உத்தியோகபூர்வமற்ற ஊடகங்களில் வெளியாகின்ற செய்திகள் அவைகள் ஏனைய நாடுகளில் பிரதேசங்களில் நடந்தவற்றை திரிவுபடுத்தி வருகின்றன. ஆனால், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அறுக்கப்படுகின்ற மாட்டிறைச்சியை நுகர்வதனால் எவ்வித நோய்களும் ஏற்படப்போவதில்லை.
மாடுகளுக்கு இக்காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள வைரஸ் நோயினை மையமாகக் கொண்டு பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இவ்விடயத்தை மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக விலங்கறுமனை, சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, கால்நடை வைத்திய அதிகாரி பணிமனை, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் கண்காணிக்கப்படுகின்றது.
அதுமாத்திரமன்றி, நிந்நவூர் பகுதியிலுள்ள வளர்ப்பு மாடுகள் கூட எவ்வாறான நிலைமைகளில் உள்ளது என்பதைக் கண்டறிவதற்கும் ஆராயப்படுகின்றது. இவ்வாறான மாடுகளில் நோய் நிலைமையிலுள்ள மாடுகள் இனங்காணப்பட்டிருக்கின்றது. அவ்வாறு இனங்காணப்பட்ட மாடுகள் வேறாக்கி அவற்றை அறுக்காமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதனை நாம் கண்காணிக்கின்றோம்.
அத்துடன், விலங்கறுமனைகள் கூட பிரதேச சபையின் பங்களிப்புடன் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. அது முறையாகப் பராமரிக்கப்படுகின்றது.
அதேபோன்று எமது பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் நாளாந்தம் மாடுகள் அறுக்கப்படுவதற்கு முன்னர் அங்கு சென்று கண்காணிக்கின்றார்கள். அது மாத்திரமன்றி, அன்றைய நாள் அறுபடத்தயாராக இருக்கின்ற மாடுகள் முறையாகப் பரிசோதனைக்குட்படுத்தப்படுகின்றது.
இவ்வாறு பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட மாடுகள் உட்பட இறைச்சிக்கடை உரிமையாளர் ஆகியோரை பரிசோதனை மேற்கொண்ட பொதுச் சுகாதார பரிசோதகர் புகைப்படமெடுத்து சுகாதார வைத்திய அதிகாரியாகிய எனக்கும் நிறுவன தொலைபேசிக்கும் அனுப்பி வைக்கின்றார். இவ்வாறான கடும் நிபந்தனைக்குப் பின்னர்தான் இந்த மாடறுக்கின்ற செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.
மேலும், மாடு அறுக்கப்பட்ட பின்னரும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் உத்தியோகபூர்வ முத்திரையை மாட்டின் ஒரு பகுதியில் பதிவு செய்கின்றோம்.
அது மாத்திரமன்றி, நிந்தவூர் பகுதியில் அமைந்துள்ள சகல இறைச்சிக் கடைகளுக்கும் நாமும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் கள விஜயம் செய்து ஆராய்கின்றோம்.
இந்த ஆராய்வின்போது எமது முத்திரை பொறிக்கப்படாமல் விற்பனை செய்யப்படுகின்ற இறைச்சிகளை மனித நுகர்விற்குப் பொருத்தமற்றது எனக்கூறி அந்த இடத்தில் அழிப்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றோம். இச்செயற்பாடு நாளாந்தம் இடம்பெற்ற வண்ணமுள்ளது.
விலங்கறுமனையில் மாடுகள் அறுக்கப்படாமல் தனியார் வளவு, வெளி இடங்களில் அறுக்கப்பட்டு இறைச்சிக் கடைகளில் விற்பனை செய்யப்படுமாயின், அந்த இறைச்சியில் எமது முத்திரை பொறிக்கப்பட்டிருக்காது. அவ்வாறான இறைச்சிகள் கைப்பற்றப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறான இறைச்சிகளை விற்பதற்கு அனுமதி நாங்கள் அனுமதி வழங்கமாட்டோம்.
இவ்விடயத்தில் பொதுமக்களாகிய நீங்கள் பீதியடைய வேண்டிய ஒரு காரணமும் கிடையாது. ஏனெனில், இது ஒரு வைரஸ் நோய். இந்நோய் எல்லா மாடுகளுக்கும் பரவுவதில்லை. குறிப்பிட்ட மாடுகளுக்குதான் பரவி இரக்கின்றது. அந்த குறிப்பிட்ட மாடுகளை வேறாக்கி வைத்துள்ளோம். அவற்றை நாளாந்தம் உன்னிப்பாகப் பார்வையிடுகின்றோம். அம்மாடுகள் அறுக்கப்படும் எந்த ஒரு வாய்ப்பினையும் நாம் விட்டு வைக்கவில்லை. அம்மாடுகள் வேறாக வைத்து கண்காணிக்கப்படுகின்றது. அந்த வகையில், நோய்களற்ற மாடுகளே அறுக்கப்படுகின்றது.
அதுவும் விலங்கறுமனையில் மாத்திரம்தான் மாடுகள் யாவும் அறுக்கப்படுகின்றது. விலங்கறுமனைக்கு வெளியில் மாடுகளை அறுப்பதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. சட்டவிரோதமாக மாடுகள் அறுக்கப்படுமிடத்து பொதுமக்களாகிய நீங்கள் எமக்கு தெரியப்படுத்துங்கள். உடனடியாக சம்பவ இடத்திற்கு உரிய அதிகாரிகள் வருகை தந்து சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என உறுதியளிக்கின்றேன். பொதுமக்களாகிய நீங்கள் இறைச்சி சாப்பிட அச்சப்படத் தேவையில்லை எனக்குறிப்பிட்டார்.
இவ்விசேட செய்தியாளர் சந்திப்பில் நிந்தவூர் பிரதேச சபை செயலாளர் திலகா பரமேஸ்வரன், நிந்தவூர் பிரதேச அரசகால்நடை வைத்திய அதிகாரி கதீஸ்வரன், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள், இறைச்சிக்கடை உரிமையாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment