பாறுக் ஷிஹான்
பிள்ளைகள் போதைப் பொருள் பாவனையில் ஈடுபடுவதற்கு பெற்றோரின் கவனயீனமும் காரணமாகும் என கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.நசீர் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பகுதியில் சர்வதேச புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகம் மற்றும் பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் அனுசரணையில் 'புகைத்தலிலிருந்து மீண்ட ஒரு கிராமம்' எனும் தொனிப்பொருளில் மாபெரும் எதிர்ப்புப்பேரணி தொடர்பில் வெள்ளிக்கிழமை (9) இரவு விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, பிள்ளைகள் போதைப் பொருள் பாவனையில் ஈடுபடுவதற்கு பெற்றோரின் கவனயீனமும் காரணமாகும்.
இவ்விடயத்தில் பெற்றோர்கள் ஒத்துழைக்காவிடின் இப்போதைப் பொருள் ஒழிப்பு விடயத்தில் முன்னேற்றமானது ஏற்படப்போவதில்லை. இதை விட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்களை தமது பிள்ளைகள் போன்று கண்காணிக்க வேண்டும்.
இது தொடர்பில் பல கலந்துரையாடல்களை மேற்கொள்ளவிருக்கின்றோம். இதை விட பொலிஸாரின் ஒத்துழைப்புக்களையும் எமது அமைப்பு பெற்றுக்கொண்டு இச்செயற்திட்டத்தை முன்னெடுக்கும் என்றார்.
இவ்விசேட செய்தியாளர் சந்திப்பில் கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் நிர்வாகப் பணிப்பாளர் தபாலதிபர் யூ.எல்.எம்.பைசர் மற்றும் சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் றியாத் ஏ.மஜீத் ஆகியோர் இணைந்திருந்தனர்.
No comments:
Post a Comment