குருநாகலிலும் பரவ ஆரம்பித்துள்ள தோல் கழலை நோய் : 100 க்கும் அதிகமான கால்நடைகள் பாதிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, May 28, 2023

குருநாகலிலும் பரவ ஆரம்பித்துள்ள தோல் கழலை நோய் : 100 க்கும் அதிகமான கால்நடைகள் பாதிப்பு

(எம்.வை.எம்.சியாம்)

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கால்நடைகளில் பரவிய தோல் கழலை நோய் குருநாகல் மாவட்டத்திலும் மாடுகளிடையே பரவ ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக 100 க்கும் அதிகமான கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கால்நடைகளிடையே ஒரு வகையான நோய் பரவ ஆரம்பித்தமை முதன் முதலில் கண்டறியப்பட்டது. மேலும், திருகோணமலை மாவட்டத்திலும் குறித்த தொற்று நோய் அடையாளம் காணப்பட்டது. பின்னர் வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் தோல் கழலை அறிகுறிகளுடன் கால்நடைகள் அடையாளம் காணப்பட்டன.

இந்த வருடத்தின் மார்ச் ஆரம்பத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டத்தில் பல பகுதிகளில் பரவிய தோல் கழலை நோய் பின்னர் யாழ்ப்பாணம், மன்னார் போன்ற பகுதிகளிலும் அடையாளம் காணப்பட்டது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணப்பட்ட தோல் கழலை நோய் அண்மையில் பரவிய நிலையில் குருநாகல் மாவட்டத்திலும் மாடுகளிடையே பரவ ஆரம்பித்துள்ளது.

அதற்கமைவாக குருநாகல் மாவட்டத்தின் ஹொரம்பாவ, நாரமல்ல,கெகுனுகொல்ல, மெட்டியாவ, மீரயால, பண்டாரகொஸ்வத்தை, வரகாகொட்டுவ உள்ளிட்ட பகுதிகளில் மாடுகளிடையே தோல் கழலை நோய் பரவுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த நோய் தாக்கத்தால் குருநாகல் பகுதிகளிலுள்ள 100 க்கும் அதிகமான மாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமமாலி கொத்தலாவல கருத்து தெரிவிக்கையில், குருநாகல் பகுதியில் பால் அதிகம் சுரக்கும் கால்நடைகள் அதிகம் காணப்படுகின்றன. தடுப்பூசிகள் சில பகுதிகளில் காணப்படுகின்றன. எனினும் அவை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. பாரிய பண்ணைகளுக்கு அதனை கொண்டு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நான் இந்த மாகாணத்துக்கு பொறுப்பான பணிப்பாளருடன் கலந்துரையாடினேன். குறிப்பிட்டளவு தடுப்பூசிகள் தேவைப்படுமாயின் அதனை வழங்க முடியும். எனினும் கால்நடை வளர்பாளர்களுக்கு தடுப்பூசி கட்டணத்தை செலுத்தி அதனை பெற்றுக் கொள்வதற்கு தேவையேற்படும். இந்த தடுப்பூசிகளும் இந்த நோயை தடுப்பதற்காகவே வழங்கப்படுகிறது என்றார்.

லம்பி டிசீஸ் எனப்படும் தோல் கழலை நோய் கால்நடைகளை பெரிதும் பாதிக்கிறது. இந்த நோய் காரணமாக கால்நடைகளுக்கு காய்ச்சல், உணவில் நாட்டமின்மை, சோர்வு, உமிழ் நீர் வெளியேற்றம், கண்ணீர், நடப்பதில் சிரமம், கால், கழுத்து பகுதிகளில் வீக்கம், கட்டிகள் உடைந்து கொப்பளங்களாக மாறுதல் போன்ற நோய் அறிகள் காணப்படுகிறது.

No comments:

Post a Comment