கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் தற்போது நடைபெற்று வரும் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை ஆகியவற்றின் பெறுபேறுகளை எதிர்வரும் ஜூன் மாத இறுதிக்குள் பெற்றுக் கொடுக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
சவாலான வருடமான 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை மற்றும் சாதாரண தரப்பரீட்சைகள் இந்த ஆண்டில் நடத்தப்பட்டுள்ளது. தற்போது நாடளாவிய ரீதியிலுள்ள 3500 பரீட்சை நிலையங்களில் சாதாரண தரப் பரீட்சை இடம் பெற்று வருகிறது.
அத்துடன் உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் நடவடிக்கைகளும் சமகாலத்தில் இடம்பெற்று வருகின்றன.
இந்த சவாலான நடவடிக்கைகளை பரீட்சைகள் திணைக்களமும் கல்வியமைச்சும் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கல்வியமைச்சும் CMA நிறுவனமும் இணைந்து நேற்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நடத்திய நிகழ்வொன்றின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர், நாட்டின் பொருளாதாரத்தில் நேரடியாக பாதிப்புகளை ஏற்படுத்தும் வணிக மற்றும் வர்த்தக கல்வி பாடங்களை கற்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் அந்த விடயம் தொடர்பில் போதிய தெளிவு பெற்றுக் கொள்வது அவசியமாகும்.
வங்கிகள் போன்ற நிறுவனங்களில் அதற்கான அனுபவங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். அதற்கான எழுத்து மூல அனுமதியை சுற்றறிக்கை மூலம் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment