புத்தசாசனத்துக்கு பாதிப்பெனக் குறிப்பிட்டு உண்மை பிரச்சினைகளை மூடி மறைக்கும் செயற்பாடுகள் முன்னெடுப்பு - டிலான் பெரேரா - News View

About Us

About Us

Breaking

Monday, May 29, 2023

புத்தசாசனத்துக்கு பாதிப்பெனக் குறிப்பிட்டு உண்மை பிரச்சினைகளை மூடி மறைக்கும் செயற்பாடுகள் முன்னெடுப்பு - டிலான் பெரேரா

(இராஜதுரை ஹஷான்)

ஜெரோம் பெர்னாண்டோ, ஞானசார தேரர் ஆகிய இருவரும் நாணயத்தின் இரு பக்கங்களை போன்றவர்கள். இருவரும் மதவாதிகளே. புத்தசாசனத்துக்கு பாதிப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு உண்மை பிரச்சினைகளை மூடி மறைக்கும் செயற்பாடுகள் மாத்திரமே முன்னெடுக்கப்படுகின்றன என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதி டிலான் பெரேரா தெரிவித்தார்.

நாவல பகுதியில் திங்கட்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நாட்டில் கடந்த காலங்களை காட்டிலும் தற்போது சமூக விரோத செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

கடந்த ஐந்து மாத காலத்துக்குள் மாத்திரம் 27 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அதனால் 19 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

போதைப் பொருள் வியாபாரம், பாதாள குழு செயற்பாடு என்பன பகிரங்கமாகவே இடம்பெறுகின்றன. மேல் மற்றும் தென் மாகாணங்களில் பாதாள குழுவின் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளன. நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு முறையாக பேணப்படுவதில்லை.

புத்தசாசனத்துக்கு பாதிப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு நாட்டின் உண்மை பிரச்சினைகளை மூடி மறைக்கும் செயற்பாடுகள் மாத்திரமே முன்னெடுக்கப்படுகின்றன.

அரசாங்கத்துக்கு சார்பாக செயற்படும் ஒரு சில ஊடகங்களும் இவ்வாறான விடயங்களுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்குகின்றன.

மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ குறிப்பிட்ட கருத்து முறையற்றது. இவ்விடயத்தில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் பின்னணியில் அந்த விடயம் அரசியலுக்காகவும், நாட்டின் பிரதான பிரச்சினையாகவும் பேசப்படுகிறது.

ஜெரோம் பெர்னாண்டோவின் விவகாரத்திற்கு பின்னர் தற்போது நகைச்சுவை மேடை பேச்சாளர் நடாஷா எதிரிசூரிய என்பவரின் விவகாரம் பிரதான விடயமாக பேசப்படுகிறது.

மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் விவகாரத்தை தொடர்ந்து கடந்த காலங்களில் தலைமறைவாகியிருந்த பலர் தற்போது வெளிவந்துள்ளார்கள்.

ஜெரோம் பெர்னாண்டோ, ஞானசார தேரர் ஆகிய இருவரும் நாணயத்தின் இரு பக்கங்களை போன்றவர்கள். இருவரும் மதவாதிகளே, தேவையில்லாத பிரச்சினைகளை மாத்திரம் தோற்றுவிக்கிறார்கள் என்றார்.

No comments:

Post a Comment