வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆளுனர்கள் ஜனாதிபதியின் பிரதிநிதிகளாக மக்களுக்கான முழுமையான சேவைகளை வழங்க அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் எனத் தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை (17) புதிய ஆளுனர்களாக நியமனம் பெற்ற பி.எஸ்.எம்.சார்ள்ஸ், செந்தில் தொண்டமான் மற்றும் லக்ஷ்மன் யாபா அபேவர்தன ஆகியோர் பதவியேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
கிழக்கு ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவிக்கையில், கிழக்கு ஆளுனராக என்னை நியமித்துள்ளமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த நியமனத்தின் ஊடாக ஜனாதிபதி எதிர்பார்க்கும் அனைத்து சேவைகளையும் மக்களுக்கு நிச்சயம் வழங்குவேன் என்றார்.
வடக்கு ஆளுனர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவிக்கையில், எனக்கு வட மாகாண ஆளுனராக நியமனம் வழங்கியமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். வடக்கு மாகாணத்திலுள்ள மக்களுக்கு பல தீர்க்கப்படாத பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவற்றை தீர்ப்பதற்கான சிறந்த வாய்ப்பாக இந்த நியமனத்தைப் பயன்படுத்திக் கொள்ள எதிர்பார்க்கின்றேன் என்றார்.
வடமேல் மாகாண ஆளுனர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவிக்கையில், எனது 40 ஆண்டு கால அரசியல் அனுபவத்தில் 26 ஆண்டுகள் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்திருக்கின்றேன். அதற்கமைய என்னிடமிருந்து சேவைகளைப் பெற்றுக் கொள்ள ஜனாதிபதி தீர்மானித்திருக்கின்றார். எனவே ஜனாதிபதியின் பிரதிநிதியாக வடமேல் மாகாணத்துக்கு எனது முழுமையான சேவைகளை வழங்கவும், அவரது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவும் எதிர்பார்த்துள்ளேன் என்றார்.
No comments:
Post a Comment