அரசியல் தகுதியின் அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டேன் என்பதை ஜனக ரத்நாயக்க ஏற்றுக் கொண்டார் - பிரேம்நாத் சி தொலவத்த - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 24, 2023

அரசியல் தகுதியின் அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டேன் என்பதை ஜனக ரத்நாயக்க ஏற்றுக் கொண்டார் - பிரேம்நாத் சி தொலவத்த

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

அரசியல் தகுதியின் அடிப்படையிலேயே தலைவராக நியமிக்கப்பட்டேன் என்பதை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க ஏற்றுக் கொண்டார். துறைசார் தகைமை இல்லாத ஒருவர் அரசியல் சிபாரிசுக்கு அமைய நியமிக்கப்பட்டால் ஆணைக்குழு எவ்வாறு சுயாதீனமாக செயற்படும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பின் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, கடந்த ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி காலி முகத்திடல் போராட்டக்களத்தில் இடம்பெற்ற தாக்குதலை தொடர்ந்து ஆளும் தரப்பினர் ஆதரவாளர்கள் தாக்கப்பட்டார்கள். இவ்வாறு தாக்கப்பட்டவர்களை வெறுப்பூட்டும் வகையில் ஒரு தரப்பினர் செயற்படுகிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்களை சமூக வலைத்தளங்களில் தொடர்புப்படுத்தி ஒரு தரப்பினர் வெறுக்கத்தக்க வகையில் செயற்படுகிறார்கள். நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது. ஆகவே தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிப்பதை ஒரு தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை கடந்த ஆண்டே பதவி நீக்கம் செய்திருக்க வேண்டும்.

நாட்டில் மின் விநியோக கட்டமைப்பில் நெருக்கடி நிலை தோற்றம் பெற்றபோது கடந்த ஆண்டு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டது. இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு எந்த தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட்டீர்கள் என ஜனக ரத்நாயக்கவிடம் கேள்வி எழுப்பினேன்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் உயர் பதவி வகித்துள்ளேன் என்றார். முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுடன் இணக்கமாக செயற்பட்டார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க துறைசார் தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்படவில்லை.

அரசியல் தகுதி, சிபாரிசு ஆகியவற்றின் அடிப்படையில்தான் இவர் நியமிக்கப்பட்டார். சுயாதீன ஆணைக்குழுவின் தலைவர் தகுதி அடிப்படையில் நியமிக்காமல் அரசியல் சிபாரிசுடன் நியமிக்கப்படும்போது ஆணைக்குழுக்கள் எவ்வாறு சுயாதீனமாக செயற்படும்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தொடர்பில் எதிர்க்கட்சிகள் மத்தியிலும் நல்லதொரு நிலைப்பாடு கிடையாது. இவரை பதவி நீக்கும் தீர்மானம் சிறந்தது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு தகுதியான ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment