மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக செயற்பட்டமையாலேயே ஜனக்க ரத்னாயக்கவை பதவி நீக்க நடவடிக்கை - விமல் வீரவன்ச - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 24, 2023

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக செயற்பட்டமையாலேயே ஜனக்க ரத்னாயக்கவை பதவி நீக்க நடவடிக்கை - விமல் வீரவன்ச

(எம்,ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அரச நிறுவனங்கள் பலவற்றில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கொண்ட தலைவர்கள் இருக்கையில், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை மாத்திரம் பதவி நீக்க வேண்டும் என்று எவ்வாறு கூற முடியும் என தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) நடைபெற்ற பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரட்நாயக்கவை பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவரை பதவி விலக்க வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.

இதேபோன்று மற்றைய நிறுவனங்களில் தலைவர்கள் இல்லையா? அவர்களை பதவி நீக்க மாட்டீர்களா? அவர்கள் அந்தப் பதவிகளில் இருக்கும் நிலையில், இந்த தலைவர் மட்டும் உங்களுக்கு எப்படி ஒவ்வாதவராக இருக்கலாம்.

இங்கே தவறான தர்க்கங்களே முன்வைக்கப்படுகின்றன. அரசாங்க நிறுவனங்களில் தலைவர் பதவிகளை வகிக்கும் 80 வீதமானவர்களின் பெயர்களை என்னால் குறிப்பிட முடியும்.

மின்சார சபை அநீதியான மின்சார கட்டண அதிகரிப்புக்கு தீர்மானிக்கும்போது, அது தொடர்பில் கேள்வியெழுப்பிய நிலையிலேயே இவரை பதவி நீக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

மின்சார சபையின் தீர்மானங்கள் அனைத்தையும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகரிக்க வேண்டும் என்றால், எதற்கு அந்த ஆணைக்குழு, நேரடியாகவே மின்சார சபையினால் தீர்மானிக்க முடியும்தானே.

அரசாங்கத்தினால் நியமிக்கப்படும் ஆணைக்குழுவின் தலைவர்கள் அவர்களின் பொறுப்புக்களை செய்யவில்லை என்றால் அவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறான தலைவர்களுக்கு பொறுப்பு கூறுவது தொடர்பான சட்டமூலங்களை கொண்டு வாருங்கள். அதனை விடுத்து அமைச்சரின் கருத்துக்களை கேட்கவில்லை என்பதற்காக இவ்வாறாக பதவி நீக்க முயற்சிப்பதை நிறுத்துங்கள் என்றார்.

No comments:

Post a Comment