தலைவராக என்னை ஏன் நியமிக்க முடியாது - சபாநாயகரை நோக்கி கேள்வியெழுப்பிய ஹர்ஷ டி சில்வா - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 9, 2023

தலைவராக என்னை ஏன் நியமிக்க முடியாது - சபாநாயகரை நோக்கி கேள்வியெழுப்பிய ஹர்ஷ டி சில்வா

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

மத்திய வங்கியின் தவறான தீர்மானங்களினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது. நாட்டு மக்களுக்கு உண்மை நோக்கத்துடன் சேவையாற்றியுள்ளேன். பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கு அமைய அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவராக என்னை ஏன் நியமிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா சபாநாயகரை நோக்கி கேள்வியெழுப்பினார்.

அது எனக்கு தெரியாது. தெரிவுக்குழுவே தலைவரை நியமிக்க வேண்டும். தெரிவுக்குழுவுக்கு நான் தலைமை தாங்குவேன். ஆனால் தலைவரை நியமிக்கும் அதிகாரம் எனக்கு இல்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பதிலளித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற அமர்வின்போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் ஹர்ஷ டி சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, 2020 ஆம் ஆண்டு அரசாங்க நிதி தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு எனது பெயர் பரிந்துரைக்கப்பட்டது. பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளை திருத்தம் செய்து நீங்கள் (சபாநாயகரை நோக்கி) ஆளும் கட்சி உறுப்பினரை தெரிவுக்குழுவுக்கு தலைவராக நியமித்தீர்கள்.

இதன்போது குறுக்கிட்ட சபாநாயகர் 'நிலையியற் கட்டளையில் நான் மாற்றம் ஏற்படுத்தவில்லை. தெரிவுக்குழுவின் கூட்டத்தின் தீர்மானத்துக்கு அமையவே அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் நியமிக்கப்பட்டார்' என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய ஹர்ஷ டி சில்வா நீங்களே பாராளுமன்றத்தின் சபாநாயகர். ஆகவே நீங்களே பொறுப்புக்கூற வேண்டும். பாராளுமன்ற நிலையியற் கட்டளையில் அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டது. இருப்பினும் எதிர்க்கட்சிக்கு தலைவர் பதவி வழங்கப்படவில்லை. நிலையியற் கட்டளைக்கு முரணாக தலைவர் பதவி ஆளும் தரப்புக்கு வழங்கப்பட்டது.

வரிக் கொள்கை தொடர்பில் அரசாங்கம் எடுத்த தீர்மானங்கள் அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவில் ஆராயப்படவில்லை. அரசாங்கம் விரும்பிய வகையில் வரிச் சலுகை வழங்கியது. இறுதியில் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது.

நாடு வங்குரோத்து அடைந்ததன் பின்னர் அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவராக நான் நியமிக்கப்பட்டேன். குறுகிய காலத்துக்குள் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தினேன்.

நிலக்கரி கொள்வனவு தொடர்பில் அதுவரை காலமும் காணப்பட்ட பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக் கொடுத்தேன். முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் தலைவரை தெரிவுக்குழுவுக்கு அழைத்து விசாரணை செய்தோம். தனியார் நிறுவனம் ஒன்றுக்கு 16 வருடங்கள் வரிச் சலுகை வழங்கப்பட்டமை வெளிப்படுத்தப்பட்டது.

பல மோசடிகளை அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழு ஊடாக வெளிப்படுத்தியதற்கு தெரிவுக்குழு உறுப்பினர்கள் எனக்கு எதிராக செயற்பட்டார்கள். எனது செயற்பாட்டின் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவுக்குழு உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.

பாராளுமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து அரசாங்க நிதி தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தலைவராக என்னை நியமிக்க எதிர்க்கட்சியினர் பரிந்துரைத்தார்கள். நீங்களும் (சபாநாயகர்) அதனை ஏற்றுக் கொண்டீர்கள்.

எதிர்க்கட்சியினர் எனது பெயரை பரிந்துரைத்த பின்னணியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்கவின் பெயரை பரிந்துரைத்து அவரை அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த விடயத்தில் சபாநாயகர் மயந்த திஸாநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடியது முறையற்றது. சபாநாயகருக்கு அந்த அதிகாரம் இல்லை.

மத்திய வங்கியின் ஒரு சில தவறான தீர்மானங்களினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது. கண்ணை மூடிக் கொண்டு நாணயத்தை அச்சிட்டதை அரசாங்க நிதி தொடர்பான குழு கவனத்திற் கொள்ளவில்லை. முறையான தகுதிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் பரிந்துரை உள்ள நிலையில் அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவராக ஏன் என்னை நியமிக்க முடியாது என சபாநாயகரிடம் கேள்வி எழுப்பினார்.

அதன்போது உரையாற்றிய சபாநாயகர் 'அது எனக்கு தெரியாது. தெரிவுக்குழுவே தலைவரை நியமிக்க வேண்டும. இவ்விடயத்தில் நான் தெரிவுக்குழுவுக்கு தலைமை தாங்கும் அதிகாரம் உள்ளதே தவிர தலைவரை நியமிக்க அதிகாரமில்லை' என பதிலளித்தார்.

No comments:

Post a Comment