(நா.தனுஜா)
நாம் கடந்த கால அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக் கொண்டிருப்பதுடன், மிகவும் கடினமான மறுசீரமைப்புக்களை மேற்கொண்டு வருகின்றோம். துடிப்பானதும், மீளெழக்கூடிய தன்மையுடையதுமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றோம். எனவே வெகுவிரைவில் நாட்டின் நிதியியல் செயற்பாடுகள் முன்னேற்றத்தைக் காண்பிக்கும் என்றும், பொருளாதார ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்படும் என்றும் நம்புகின்றோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தென் கொரியாவின் இன்ஸியான் நகரில் கடந்த 2 - 5 ஆம் திகதி வரை நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் 56 ஆவது வருடாந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, வியாழக்கிழமை (04) நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர்களின் கூட்டத்தில் இலங்கையில் சார்பில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது, கொவிட்-19 பெருந்தொற்றானது அனைத்து நாடுகளையும் பல்வேறு சவால்களுக்கு உட்படுத்தியிருக்கின்றது. அதனையடுத்து நடைமுறைப்படுத்தப்பட்ட இறுக்கமான நாணயக் கொள்கையின் விளைவாகக் கடந்த காலங்களில் பொருளாதார வளர்ச்சி தொடர்பான குறிகாட்டிகள் மந்தகரமான நிலையிலேயே உள்ளன.
நிதியியல் இடைவெளி மற்றும் கையிருப்பின் அளவு என்பனவும் பாதகமான மட்டத்திலேயே காணப்படுகின்றன.
எனவே இந்நெருக்கடிகளால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் இப்பொருளாதார சவால்களை உரியவாறு கையாள்வதற்கு அவசியமான வழிகாட்டல்களை ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட சர்வதேசக் கட்டமைப்புக்கள் வழங்க வேண்டியது அவசியம் என்று கருதுகின்றேன்.
அதேவேளை கொவிட்-19 பெருந்தொற்றினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவும் நோக்கில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கி அதன் சொந்த நிதியிலிருந்து 20.5 பில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்தமையைப் பெரிதும் பாராட்டுகின்றேன்.
கடந்த ஆண்டு மே மாதம் 5 ஆம் திகதி நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் கூட்டத் தொடருக்கு நான் தலைமைதாங்கிய வேளையில், இலங்கை எதிர்பாராத மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்தது.
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல்கள், கொவிட்-19 பெருந்தொற்று மற்றும் உக்ரேன் - ரஷ்யப் போர் என்பனவும் அந்நெருக்கடிக்குக் காரணமாக அமைந்திருந்தன.
அப்போது ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளடங்கலாகப் பல்வேறு இரு தரப்பு மற்றும் பல்தரப்புப் பங்காளிகள் எமக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கு முன்வந்தனர். இருப்பினும் தற்போது நாம் மிக மோசமான நெருக்கடியிலிருந்து ஓரளவுக்கு மீண்டிருக்கின்றோம்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகக் கடந்த 10 - 12 மாதங்களாக மிகவும் கடினமான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம். அதன் பயனாக இப்போது பணவீக்கம் படிப்படியாக வீழ்ச்சியடைந்திருக்கின்றது.
ஆனாலும் தற்போது நாம் அடைந்திருக்கின்ற முன்னேற்றங்களைக் கொண்டு திருப்தியடைந்து விடமுடியாது என்பதை அறிவோம். இந்த முன்னேற்றங்களைத் தொடர்ந்து பேணுவதே எம்மத்தியிலுள்ள சவாலாக இருக்கின்றது.
நாம் கடந்த கால அனுபவங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டிருப்பதுடன், மிகவும் கடினமான மறுசீரமைப்புக்களை முன்னெடுத்து வருகின்றோம்.
துடிப்பானதும், மீளெழக்கூடிய தன்மையுடையதுமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றோம்.
பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும், நுண்பாகப் பொருளாதார சவால்களை உரியவாறு கையாள்வதற்கும் அவசியமான அடிப்படைகளைக் கட்டியெழுப்பியிருப்பதுடன் முறையான பொருளாதார மறுசீரமைப்புச் செயற்திட்டத்தையும் ஆரம்பித்துள்ளோம்.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிச் செயற்திட்டத்தின் கீழ் சுமார் 3 பில்லியன் டொலர் கடனுதவியைப் பெற்றுக் கொள்வதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டமையை அதன் ஓரங்கமாகக் குறிப்பிட முடியும்.
அதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டுக்கு அமைவாக உரியவாறான கடன் மறுசீரமைப்புச் செயன்முறையை முன்னெடுப்பதற்கான கடப்பாட்டை நாம் கொண்டிருக்கின்றோம்.
எனவே கடன் சுமைக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கையின் மீட்சிக்குப் பங்களிப்புச் செய்யக்கூடிய வகையில் பொதுவானதோர் கடன் சலுகை வழங்கல் திட்டத்துக்கு இணங்குமாறு அனைத்துத் தரப்பினரிடமும் கேட்டுக் கொள்கின்றோம்.
மேலும் வெகுவிரைவில் நாட்டின் நிதியியல் செயற்பாடுகள் முன்னேற்றத்தைக் காண்பிக்கும் என்றும், பொருளாதார ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்படும் என்றும் நம்புகின்றோம்.
மறுபுறம் அவசியமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளும்போது எழக்கூடிய நிதிசார் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான நிதியியல் உதவிகளை எமது இருதரப்பு மற்றும் பல்தரப்புப் பங்காளிகள் வழங்க முன்வரவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம் என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment