இலங்கை அதிபர் சேவையில் நீண்ட காலமாக நிலவி வந்த பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளை ஆராய்ந்து அதற்கான துரித தீர்வுகளை பரிந்துரை செய்வதற்காக, கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் ஆலோசகர், பேராசிரியர் குணபால நாணயக்கார உட்பட கல்வி மற்றும் நிர்வாகத் துறைகளில் நிபுணத்துவம் மிக்க ஐந்து பேரைக் கொண்டு நியமிக்கப்பட்ட இந்தக் குழு ஏற்கனவே தனது பணிகளை ஆரம்பித்துள்ளது.
அனைத்து அதிபர்கள் சங்கங்களும் தங்களின் முன்மொழிவுகளைப் பெற்று, மிக முக்கியமான விடயங்களை முன்வைக்க எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மே மாதம் 15ஆம் திகதி முதல் தொழிற்சங்க அமைப்புகளுடன் நேர்காணல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வித்துறை வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களிடம் கேட்டறிந்து மாகாண வலய அலுவலகங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பாடசாலைகளுக்குச் சென்று தற்போதைய நிலவரத்தை அறிந்துகொள்ள உள்ளதாகவும், குழுவின் தலைவர் தெரிவித்தார்.
உத்தேச கல்விச் சீர்திருத்தங்களை அடிப்படையாகக் கொண்டு அதிபரின் சேவையை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்மொழியுமாறு அமைச்சர் இங்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்தக் குழுவின் அறிக்கை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட உள்ளதென்றும், கல்வி அமைச்சு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment