செங்கல்பட்டு மாவட்டம் நங்கநல்லூர் பகுதியில் உள்ள கோயிலில், பங்குனி உத்திரத்தையொட்டி நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது குளத்திற்குள் இறங்கிய 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் அருகே உள்ள நங்கநல்லூர் என்ற பகுதியில் தர்மலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம், நங்கநல்லூர் எம்.எம்.டி.சி. காலனியில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயில் உற்சவருக்கு, புதன்கிழமை காலை பங்குனி உத்திரத்தையொட்டி தீர்த்தவாரி நடத்தப்பட்டது.
பல்லக்கில் சுவாமியை ஊர்வலமாக கொண்டு சென்ற கோயில் அர்ச்சகர்கள், முவரசம்பட்டில் உள்ள ஒரு குளத்தில் தீர்த்தவாரி நடத்த தொடங்கினர்.
பல்லக்கில் இருக்கும் உற்சவருக்கு குளத்தில் நீராட்டி விட்டு மீண்டும் கரைக்கு கொண்டுவருவார்கள். உற்சவ மூர்த்தியோடு அர்ச்சகர்களும் குளத்தில் முழுகி எழுவார்கள்.
நேற்று நடைபெற்ற இந்த தீர்த்தவாரியில், கோயில் அர்ச்சகர்களுடன் 20 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும் குளத்திற்குள் இறங்கினர். இவர்கள், விழாக்காலத்தில் பூஜைகளில் உதவுவதற்காக அர்ச்சகர்களால் அழைத்துவரப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.
குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது சுவாமி சிலையும் சில அர்ச்சனை பொருட்களும் நீரில் மூழ்கி எடுக்க குளத்தில் அர்ச்சகர்கள் உட்பட 25 பேர் இறங்கியதாகவும் அப்போது இரண்டு முறை சுவாமி சிலையும் அர்ச்சனை பொருட்களும் மூழ்க வைத்து அவர்கள் எடுத்ததாகவும் தெரிகிறது.
மூன்றாவது முறை மூழ்கும்போது அர்ச்சகர் ஒருவரின் கால் சேற்றில் சிக்கி தவித்துக் கொண்டிருந்ததை பார்த்த மற்ற அர்ச்சகர்கள் பதறியபடி அவரை காப்பாற்ற முயற்சித்தனர். இதில் சேற்றில் சிக்கிய அர்ச்சகர் உட்பட ஐந்து பேர் தத்தளித்து கொண்டே நேரில் மூழ்கினர்.
இதனையடுத்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வேளச்சேரி, கிண்டி தீயணைப்பு வீரர்கள், நீரில் மூழ்கியவர்களை தேடி மீட்பு பணியில் இறங்கினர்.
குறிப்பிட்ட நேர தேடுதலுக்குப் பிறகு, நான்கு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. நீண்ட நேரத்திற்கு பிறகு மேலும் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
பின்னர் அவர்கள் சடலங்களை உடற் கூறாய்வுக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவம் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறை உயர் அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு வந்து கோயில் நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதோடு சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, தெற்கு இணை ஆணையர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து விசாரிக்கையில் உயிரிழந்தவர்கள் சூர்யா (22), பானேஷ் (22), ராகவன் (22), யோகேஸ்வரன் (21) மற்றும் ராகவன் (18) ஆகியோர் என்று தெரியவந்தது. இவர்களில் சிலர் வேலை பார்த்து வருகின்றனர், மற்றவர்கள் கல்லூரியில் படித்து வருகின்றனர்.
ஆணையர் என்ன சொன்னார்
ஐந்து அர்ச்சகர்கள் இறந்தது குறித்து பேசிய ஆணையர் ஷங்கர் ஜிவால், அர்ச்சகர்கள் தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது குளத்தில் மூழ்கி எழுந்த சமயத்தில் ஒருவர் விழுந்தபோது மற்றவர் உதவ முற்பட, அவர்களும் உள்ளே விழுந்துள்ளனர் என்று தெரியவருகிறது என்றார்.
''குளம் எவ்வளவு ஆழம்? இவர்கள் எப்படி தவறி விழுந்தனர்? என்று விசாரித்து வருகிறோம். தற்போது ஐந்து நபர்கள் இறந்துள்ளனர். வேறு யாரும் உள்ளே சிக்கியுள்ளார்களா என்றும் தேடிவருகிறோம். இறந்தவர்கள் 18 முதல் 25 வயதுள்ள நபர்கள்,'' என்றார்.
மேலும், ஐந்து நபர்கள் இறந்த குளம் கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமான குளம் இல்லை என்றும் பஞ்சாயத்துக்கு சொந்தமான குளம் என்பதால், குளத்தின் பராமரிப்பு குறித்தும் விசாரணை நடைபெற்றுவருகின்றது என்றார் அவர்.
நிவாரணம் அறிவித்த தமிழ்நாட்டு முதலமைச்சர்
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இன்று காலை (நேற்று) நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில், குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளவர்கள் குறித்த செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும் உறவினர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் குடும்பத்திற்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment