(எம்.மனோசித்ரா)
வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளமை மற்றும் தனது இரு மாற்றுத்திறனாளி ஆண் பிள்ளைகளின் மருத்துவ செலவிற்கு பணம் இல்லாததன் காரணமாக தாயொருவர் தனது இரு பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.
அத்துடன் தாயால் கிணற்றில் தள்ளி விடப்பட்ட அவரின் 21 வயது மகன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அநுராதபுரம் கெப்பிட்டிகொல்லாவ பொலிஸ் பிரிவில் கணுகஹவெல பிரதேசத்தில் பெண்ணொருவர் தனது அங்கவீனமுற்ற மூத்த மகன் மற்றும் பேச்சுத்திறனற்ற இளைய மகன் ஆகியோரை கிணற்றில் தள்ளி விட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கெப்பிட்டிகொல்லாவ பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், தாயால் கிணற்றில் தள்ளி விடப்பட்ட ஒரு பிள்ளை உயிரிழந்துள்ளதாகவும், ஏனைய பிள்ளையும் தாயும் மீட்கப்பட்டு அநுராதபுரம் வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதன்போது உயிரிழந்தவர் 21 வயது இளைஞன் ஆவார். இவரின் சடலம் அநுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் கெப்பிட்டிகொல்லாவ பொலிஸ் பிரிவில் கணுகஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த சுனில் சாந்தகே ரவிது மிஹிரங்க என்ற 21 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞரின் 48 வயதுடைய தாயும், 9 வயது சகோதரனும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிள்ளைகளின் தந்தை நேற்று (05) அதிகாலை கடமைக்குச் சென்ற பின்னர், காலை 10 மணியளவில் காலை உணவுக்கு வீடு திரும்பியபோது, வீட்டில் மனைவி மற்றும் இரு மகன்களை காணாததால், கிணற்றில் மனைவி மற்றும் இரு மகன்களும் கிடப்பதைக் கண்டதாக விசாரணை நடத்திய பொலிஸார் தெரிவித்தனர்.
கெப்பிட்டிகொல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment