மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அமளிதுமளி : பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதி : வியாழேந்திரன் மற்றும் சாணக்கியன் வெளிநடப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, March 30, 2023

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அமளிதுமளி : பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதி : வியாழேந்திரன் மற்றும் சாணக்கியன் வெளிநடப்பு

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று (30) நடைபெற்ற நிலையில், மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்புக்கு எதிராக பொதுமக்கள் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தினை முற்றுகையிட்டு முன்னெடுத்த போராட்டம் காரணமாக மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக பெரும் அமளிதுமளி ஏற்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, கூட்டத்தில் இருந்து இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோர் இடைநடுவில் வெளியேறி வெளிநடப்பு செய்தனர்.

மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று (30) காலை 9 மணிக்கு இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது.

இன்று காலை மாவட்டச் செயலகத்தின், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் ஆரம்பமாகிய நிலையில், மாவட்டச் செயலகத்திற்கு ஊர்வலமாக வந்த பொதுமக்கள் மாவட்டச் செயலகத்திற்குள் நுழைய முற்பட்ட வேளையில், பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே, முறுகல் நிலையேற்பட்டதுடன், மாவட்டச் செயலகத்திற்குள் நுழைய முடியாதவாறு வாயில் கதவுகள் மூடப்பட்டன.
இதன்போது மாவட்டச் செயலகத்திற்குள் நுழைய முடியாதவாறு மாவட்டச் செயலக கதவினை மறித்து பொதுமக்களும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனும் இணைந்து போராட்டங்களை முன்னெடுத்தனர்.

வாகனேரி பகுதியில், சூரிய மின்கல மின் திட்டத்தினை அமைப்பதற்காக விவசாய காணியை எடுக்க முனையும் செயற்பாட்டைக் கண்டித்தும், வாகரைப் பகுதியில் இல்மனைட் அகழ்வை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னெடுக்கப்படும் செயற்பாட்டை நிறுத்தக் கோரியும், மயிலத்தைமடு மேச்சல்தரை காணி அபகரிப்பு போன்ற பல்வேறு காணிகளை அபிவிருத்தி என்ற பேர்வையில் அபகரிப்பை நிறுத்தக் கோரியும் பொதுமக்கள் மாவட்டச் செயலக்குக்கு முன்னால் ஒன்று திரண்டனர்.

பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களை நடாத்தாமல், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தினை நடாத்தி, காணி தொடர்பான தமக்கு சாதகமான தீர்மானங்களை எடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக இதன்போது கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

இதனையடுத்து ஒன்று திரண்ட பொதுமக்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தை நோக்கி சென்ற நிலையில் அவர்களை காரியாலய பகுதிக்கு செல்லவிடாது பொலிஸார் தடுத்து நிறுத்தி வாசல் கதவை பூட்ட முற்பட்டனர்.
இதன்போது அதனை மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் உட் செல்ல முற்பட்டபோது அதனை பொலிஸார் தடுக்க முற்பட்டபோது பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதனையும் மீறி மாவட்டச் செயலக பகுதிக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் உள் நுழைந்தையடுத்து அங்கு பதற்றநிலை ஏற்பட்டது. மாவட்டச் செயலகத்துக்குள் உள் நுழையும் கோட்டை கதவை பொலிஸார் பூட்டி உட்செல்ல விடாது தடுத்து நிறுத்தியதையடுத்து, அந்த கதவின் முன்னால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அமர்ந்து இருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேநேரம், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு வருகை தந்த இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனை உள் நுழைவதற்கு அனுமதிக்காத நிலையில், பொலிஸாருக்கும் இராஜாங்க அமைச்சருக்கும் இடையிலே வாய்த்தர்க்கம் ஏற்பட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.

இதன்போது ஆர்ப்பாட்டத்திற்கும் தனது ஆதரவினைத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பொதுமக்களின் கருத்துக்கள் பெற்றுக் கொள்ளப்படாமல், ஒரு சில அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் முன்னெடுக்கும், செயற்பாடுகள் காரணமாக மாவட்டம் பல கஸ்டங்களை எதிர்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளதாக இதன்போது தெரிவித்தார்.

இந்நிலையில் அரசாங்க அதிபருடன், பொலிஸார் கலந்துரையாடிய நிலையில் கூட்டத்திற்கு செல்வதற்கு இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் ஊடகவியலாளர்களையும் மாவட்டச் செயலகத்திற்குள் செல்வதற்கு அனுமதித்தனர்.
இதன்போது மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்று, மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக குழப்ப நிலையேற்பட்டது.

மக்கள் வெளியே போராடிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் கோரிக்கையினை நிறைவேற்றிவிட்டு அல்லது அவர்களின் கோரிக்கை தொடர்பில் சரியான பதிலை வழங்கி விட்டு, மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தை நடத்துங்கள் என்று கோரிய நிலையில், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, மாவட்டச் செயலகத்தின் காணி தொடர்பில் தன்னால், தகவல் அறியும் சட்டத்தில் கோரப்பட்ட தகவல்கள் வழங்கப்படாத காரணத்தினை கோரிய நிலையில், அது தொடர்பான விபரங்கள் மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஆகியோரால் வழங்கப்பட்ட போதிலும், அதனை ஏற்றுக் கொள்ளாத இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், 30 வருடமாக நிலத்தினைப் பாதுகாப்பதற்காகவே தமிழ் மக்கள் போராடிய நிலையில், இன்று அந்த நிலத்திற்கு ஆபத்தான நிலையேற்பட்டுள்ளதால், இங்கு அதற்கான சரியான தெளிவுபடுத்தல்கள் வழங்கப்படாத நிலையில், இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதில் பயனில்லை எனத் தெரிவித்தார்

இதையடுத்து அவர் பல வாதப் பிரதிவாதங்களின் மத்தியில் இங்கு மக்களுக்கு தீர்வு கிடைக்காது என தெரிவித்து கூட்டத்தில் இருந்து இராஜாங்க அமைச்சர் இடைநடுவில் வெளியேறினார்.

இதேநேரம் இராஜாங்க அமைச்சரும் அபிவிருத்தி குழுத் தலைவருமான சி.சந்திரகாந்தனிடம் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் காணி அபகரிப்பு தொடர்பாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அபிவிருத்தி குழுத் தலைவர் அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களை அவமதித்து பேசியதுடன் அமளி துமளி ஏற்பட்டதையடுத்து இரா.சாணக்கியன் இடைநடுவில் அங்கிருந்து வெளியேறி வெளிநடப்பு செய்ததையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பகல் 11.30 மணிக்கு அங்கிருந்து விலகிச் சென்றனர்.

No comments:

Post a Comment