வவுனியா - வெடுக்குநாறி ஆலயம் உடைக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கும், தமக்கும் இடையில் எந்தவித தொடர்பும் கிடையாது என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகளை ஆரம்பிக்குமாறு, தான் தொல்பொருள் திணைக்களத்திற்கும், நெடுங்கேணி பொலிஸாருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அவர் கூறுகின்றார்.
ஆலயம் அரசாங்கத்தினால் உடைக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் குற்றச்சாட்டு தொடர்பில் வினவிய போது, அமைச்சர் விதுர விக்ரமநாயக்க அதற்கும் பதிலளித்தார்.
“ஆலயத்துடன் தொடர்புடையவர்கள் இதனை செய்திருக்க மாட்டார்கள். எனினும், ஆலயத்துடன் தொடர்புப்படாது வெளிநபர்களே இதனை செய்திருக்க வேண்டும் என நினைக்கின்றேன். சில பிரச்சினைகளை உருவாக்க வெளிநபர்கள் இதனை செய்திருக்கக்கூடும்.
தொல்பொருள் திணைக்களத்திற்கு அதனை செய்ய வேண்டும் என்றால், பல இடங்களை அவ்வாறு செய்ய முடியும். எனினும், நாம் அவ்வாறு செய்ய மாட்டோம்.
ஆய்வுகளை செய்து, அதில் ஏதேனும் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், அதன் பிரகாரம் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என கலந்துரையாடியுள்ளோம்.
உண்மைகளை உறுதிப்படுத்த வேண்டும். ஆய்வுகளை நடத்தாது, எதையும் கூற முடியாது" என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் விதுர விக்ரமநாயக்க கூறினார்.
No comments:
Post a Comment