(இராஜதுரை ஹஷான்)
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான நிதியை வழங்குமாறு ஜனாதிபதியும், நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவிடம் எழுத்து மூலமாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
நிதி விடுவிப்பு விவகாரத்தில் நிதி அமைச்சரின் அனுமதி அவசியம் என திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தியதை தொடர்ந்து ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக கோரிக்கையை முன்வைத்துள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நிதி விடுவிப்பு தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்காலத் தடையுத்தரவை தொடர்ந்து தேர்தல் நடவடிக்கைகள் அரசியலமைப்பு ரீதியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது பொருத்தமானதாக அமையும் என தீர்மானிக்கப்பட்டு, மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்கள்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதியை வழங்குமாறு வலியுறுத்தி கடந்த 07 ஆம் திகதி திறைசேரியின் செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைத்தோம், நிதி விடுவிப்பு விவகாரத்தில் நிதி அமைச்சரின் அனுமதி அவசியம் என அவர் ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இவ்வாறான பின்னணியில் வாக்கெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான நிதியை வழங்குமாறு நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம். தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான நிதி தாமதமின்றிய வகையில் கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கிறோம்.
தபால் மூல வாக்பெடுப்புக்கு தேவையான வாக்குச் சீட்டுக்களை எதிர்வரும் வாரத்திலும், ஏப்ரல் 25 ஆம் திகதி இடம்பெறவுள்ள வாக்கெடுப்புக்கு தேவையான வாக்குச் சீட்டுக்களை 20 நாட்களுக்குள் வழங்குவதாக அரசாங்க அச்சகம் குறிப்பிட்டுள்ளது.
வாக்குச் சீட்டு அச்சிடல் பணிகளுக்கு தேவையான நிதியை துரிதமாக ஒப்படைக்க தீர்மானித்துள்ளோம். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எதிர்வரும் வாரம் அரசியல் கட்சி செயலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட எதிர்பார்த்துள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment