வாக்கெடுப்புக்கான திகதியை நாளை அறிவிக்க வேண்டும் : நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்வோம் - ஜி.எல். பீரிஸ் - News View

About Us

About Us

Breaking

Monday, March 6, 2023

வாக்கெடுப்புக்கான திகதியை நாளை அறிவிக்க வேண்டும் : நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்வோம் - ஜி.எல். பீரிஸ்

(இராஜதுரை ஹஷான்)

நிதி விடுவிப்பு தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவுக்கு அமைய திறைசேரியின் செயலாளர் செயற்பட வேண்டும். நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அவர் செயற்பட்டால் அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்வோம் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் நாளை இடம்பெறும் கூட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் கலந்து கொள்வோம். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு தினத்தை ஆணைக்குழு நாளை நிச்சயம் அறிவிக்க வேண்டும். திகதி அறிவிப்பைத் தொடர்ந்து நீடிப்பது அநாவசியமானது எனவும் குறிப்பிட்டார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் திங்கட்கிழமை (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உறுதியான தீர்மானத்தை அறிவிக்கும் வகையில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் செவ்வாய்க்கிழமை (07) காலை விசேட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

நிதி விடுவிப்பு தொடர்பில் திறைசேரியின் செயலாளருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது காலத்தை வீணடிக்கும் செயல் என்பதை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

நிதி விவகாரத்தில் திறைசேரியின் செயலாளர் அமைச்சரவை தீர்மானம், சுற்றறிக்கை ஆகியவற்றுக்கு அமைய இனி செயற்பட முடியாது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட தடைகளை உயர் நீதிமன்றம் தகர்த்தியுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு நிதி விடுவிப்பை தடுக்கும் செயற்பாடுகளுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. ஆகவே திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன உயர் நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைய செயற்பட வேண்டும்.

திறைசேரி செயலாளர் உயர்மட்ட ஆலோசனைக்கு அமைய செயற்பட்டு நிதி விடுவிப்பை தொடர்ந்து தாமதப்படுத்தினால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும்.

நீதிமன்ற தீர்மானத்திற்கு எதிராக செயற்படுவது சிறை செல்லக் கூடிய பாரதூரமான குற்றம். அரசியல்வாதிகள் இருவர் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டினால் சிறை சென்றுள்ளார்கள்.

உயர் நீதிமன்றத்தின் அறிவிப்புக்கு எதிராக திறைசேரி செயலாளர் செயற்பட்டால் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வோம். எமக்கு நபர் முக்கியமல்ல, அனைவரும் நீதிமன்ற தீர்ப்பிற்கு அமைய செயற்பட வேண்டும்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் நாளை இடம்பெறும் கூட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் கலந்துகொள்வோம். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு தினத்தை ஆணைக்குழு நாளை நிச்சயம் அறிவிக்க வேண்டும். திகதி அறிவிப்பை தொடர்ந்து நீடிப்பது அநாவசியமானது என்றார்.

No comments:

Post a Comment