(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
இந்திய நாட்டின் முட்டை உற்பத்தி நிறுவனத்திடமிருந்து குறுகிய காலத்திற்கு முட்டை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து ஒரு முட்டை கூட இதுவரை இறக்குமதி செய்யப்படவில்லை. ஆனால் 24 இலட்சம் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை அடிப்படையற்றது என வர்த்தகத்துறை அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (08) புதன்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார எழுப்பிய வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறை காரணமாக முட்டை உற்பத்திக்கான மூலப் பொருள் இறக்குமதிக்கு பாதிப்பு ஏற்பட்டதால் முட்டை உற்பத்தி தொழிற்துறை பாதிக்கப்பட்டதால் சந்தையில் முட்டைக்கான தட்டுப்பாடு தீவிரமைந்துள்ளதுடன், முட்டையின் விலை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயித்த போதும் முட்டைக்கான நிர்ணய விலையை தொடர்ச்சியாக பேண முடியாத நிலை காணப்படுகிறது.
இவ்வாறான பின்னணியில் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை நுகர்வுக்கான கேள்வி அதிகம் காணப்படும். ஆகவே முட்டையை இறக்குமதி செய்து சாதாரண விலையில் சந்தையில் விநியோகிக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை முன்வைத்தார்கள்.
முட்டை இறக்குமதி குறித்து அவதானம் செலுத்தப்பட்டபோது வெளிநாடுகளில் குறிப்பாக முட்டை உற்பத்தி தொழிற்துறையில் ஈடுபடும் நாடுகளில் பறவை காய்ச்சல் நோய் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் விவசாயத்துறை அமைச்சின் கீழ் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் கால்நடை பாதுகாப்பு பிரிவு விசேட அவதானம் செலுத்தி ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை தொடர்ந்து உலகின் தலைசிறந்த 5 முட்டை உற்பத்தி நாடுகளிடமிருந்து முட்டை இறக்குமதி செய்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.
குறித்த 5 நாடுகளில் இந்தியாவும் உள்ளடங்குவதால் இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்வது குறித்து இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டபோது இந்தியாவில் முட்டை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் சிறந்த 3 நிறுவனங்களை இந்திய அரசாங்கம் பரிந்துரை செய்தது.
3 இந்திய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டபோது ஒரு நிறுவனம் மாத்திரம் நாம் நிர்ணயித்த விலைக்கு முட்டையை விநியோகிக்க இணக்கம் தெரிவித்தது. இவ்வாறான நிலையில் முட்டை இறக்குமதி தீர்மானம் இன்றும் பேச்சுவார்த்தையில் உள்ளது.
இந்தியாவில் இருந்து ஒரு முட்டை கூட இறக்குமதி செய்யப்படாத நிலையில் இந்தியாவில் இருந்து 24 இலட்சம் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டு அந்த முட்டைகள் இராணுவத்தினரின் உணவு தேவைக்காக வழங்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளன. இந்த செய்தி முற்றிலும் அடிப்படையற்றது. இந்த செய்திக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment