அரிசி விற்பனை நிலையங்களின் எஞ்சிய நிர்மாணப் பணிகளை நிறைவு செய்யுங்கள் : திட்டத்தை பாதியில் நிறுத்தியதால் அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு கூடுதல் செலவு - News View

About Us

Add+Banner

Wednesday, March 1, 2023

demo-image

அரிசி விற்பனை நிலையங்களின் எஞ்சிய நிர்மாணப் பணிகளை நிறைவு செய்யுங்கள் : திட்டத்தை பாதியில் நிறுத்தியதால் அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு கூடுதல் செலவு

paddy-rice-silos-sri-lanka_09
முனீறா அபூபக்கர் 

மரதகஹமுல அரிசி களஞ்சியசாலையுடன் இணைக்கப்பட்டுள்ள 115 அரிசி விற்பனை நிலையங்களின் நிர்மாணப் பணிகளின் எஞ்சிய பணிகளை நிறைவு செய்யுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மரதகஹமுல அரிசி களஞ்சியசாலையின் நிர்மாணப் பணிகளை துரிதமாக முடித்து, பிரதேசத்தின் வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக சங்கங்களை இணைத்து மக்களுக்கு பயனுள்ள சேவையை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனவும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மரதகஹமுல அரிசி களஞ்சியசாலையுடன் இணைக்கப்பட்டுள்ள 115 அரிசி விற்பனை நிலையங்களின் எஞ்சிய பணிகளை நிறைவு செய்வதற்கு தேவையான 115 மில்லியன் ரூபா நிதியை அங்கீகரிக்கும் அமைச்சரவைப் பத்திரமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

35 வருடங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட மரதகஹமுல அரிசி வியாபாரிகள் அரிசி விற்பனை செய்வதற்கான வசதிகளுடன் கூடிய நியமிக்கப்பட்ட இடமின்மை மற்றும் அரிசியை களஞ்சியப்படுத்த இடமில்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இதன் காரணமாக அந்த தொழிலாளர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, 2014ஆம் ஆண்டு இந்த அரிசி நிலப் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஷ அவர்களால் இது செய்யப்பட்டது.

ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் செயற்பட்ட பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 2015 ஆம் ஆண்டு இல்லாதொழிக்கப்பட்டது. அதே நேரத்தில், இந்த திட்டத்தின் கட்டுமானப் பணிகளை அரச பொறியியல் கூட்டுத்தாபனம் தற்காலிகமாக நிறுத்தியது.

இத்திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக, திட்டமிடல் கட்டணத்துடன் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்காக 72,313,377.57 ரூபாவும், சம்பளம், மேலதிக நேரம் மற்றும் அது தொடர்பான செலவினங்களுக்காக 85,887,155.29 ரூபாவும் தண்ணீர் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் செலவினங்களுக்காக 13,573,777.72 ரூபாவும் அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டினார்.

நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இவ்வேளையில் வீண் செலவுகளை மேற்கொள்வது நியாயமற்றதாகும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

எனவே, உரிய தொகைக்கு அமைச்சரவை அனுமதி அளித்தவுடன், இந்த அரிசி களஞ்சியசாலையின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

சுமார் இரண்டரை ஏக்கர் நிலப் பரப்பளவில் புதிய அரிசி களஞ்சியசாலை கட்டும் பணி தொடங்கியுள்ளது. 115 கடைகளுடன், வியாபாரிகளுக்கு வாகன நிறுத்துமிடம், ஓய்வு அறை, உணவகம் ஆகியவையும் நிர்மாணிக்கப்படும்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *