பாப்பரசர் பிரான்சிஸ் கடந்த சில நாட்களாக சுவாசிப்பதில் ஏற்பட்ட சிரமத்தையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.
சுவாச நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அவர், ஒரு சில நாட்கள் சிகிச்சைக்காக ரோம் மருத்துவமனையில் தங்கியிருப்பார் என்றும் வத்திக்கான் குறிப்பிட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து, பாப்பரசர் பிரான்சிஸ் ரோமின் ஜெமெல்லி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக வத்திக்கானின் செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புருனி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவருக்கு மேற்கொண்ட சோதனைகளின் அடிப்படையில் அவருக்கு சுவாக பாதிப்பு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, அது கொரோனா தொற்று இல்லை எனவும் புருனி குறிப்பிட்டுள்ளார்.
பாப்பரசர் குணமடைய பிரார்த்திக்கும் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
ஆஜன்டீனாவில் பிறந்த ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 86 வயதான பாப்பரசர் நேற்றையதினம் புனித பீட்டர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் வாராந்த ஆராதனையை நடாத்தியிருந்த நிலையில் அவரது, இன்றைய மற்றும் நாளை வெள்ளிக்கிழமைக்கான நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாப்பரசர் பிரான்சிஸிற்கு மேற்கொள்ளப்பட்ட மார்பு CT ஸ்கேன் சோதனை அறிக்கையில் அவரது இரத்தத்தின் செறிவு அளவுகள் நன்றாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இதய பிரச்சினைகள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாப்பரசர் பிரான்சிஸ் அர்ஜென்டினாவில் பாதிரியாராக பயிற்சி மேற்கொண்டபோது நுரையீரல் தொற்று காரணமாக ஒரு பகுதி நுரையீரல் அகற்றப்பட்டதையடுத்து அவருக்கு அவ்வப்போது சுவாச பிரச்சனை ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
குருத்தோலை ஞாயிறு எதிர்வரும் ஏப்ரல் 02 ஆம் திகதி அனுசரிக்கப்படுவதோடு, உயிர்த்த ஞாயிறு தினத்தையொட்டிய புனித வாரம் அனுஷ்டிக்கப்படும் நிலையில் பாப்பரசர் பிரான்சிஸ் மீண்டும் ஜெமெல்லி வைத்தியசாலையிலிருந்து வத்திக்கான் திரும்புவாரா என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 2021 ஜூலையில், பாப்பரசர் பிரான்சிஸிற்கு அதே மருத்துவமனையில் குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 11 நாட்கள் அங்கு தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தனக்கு மீண்டும் குடலில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பாப்பரசர் பிரான்சிஸ் ஒரு வருடத்திற்கும் மேலாக கடுமையான முழங்கால் பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் நிலையில், முழங்காலில் அறுவை சிகிச்சை செய்ய மறுப்புத் தெரிவித்து வருகின்றார்.
முந்தைய அறுவை சிகிச்சையின் போது அவருக்கு வழங்கப்பட்ட மயக்க மருந்து சரியாக செயல்படாமையும் இதற்கான ஒரு காரணமாக குறிப்பிடப்படுகிறது.
No comments:
Post a Comment