முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனு மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த மனுவை எடுத்துக் கொண்டமைக்கான செலவாக ரூ. 21,000 கட்டணத்தை அறவிடுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி தமக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் நிராகரித்து அவ்வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி மைத்திரிபால சிறிசேன மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மேன்முறையீட்டு மனு இன்று (01) அழைக்கப்பட்டபோதே நீதிபதிகளான சஞ்சீவ மொராயஸ் மற்றும் பிராங்க் குணவர்தன ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
போதியளவு புலனாய்வுத் தகவல்கள் கிடைக்கப் பெற்றும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக குற்றவியல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
அதற்கமைய போதுமான புலனாய்வு தகவல்கள் இருந்தும் உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க தவறியதன் ஊடாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சிசிர மெண்டிஸ் ஆகியோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் கடந்த ஜனவரி 12ஆம் திகதி தீர்ப்பளித்தது.
இதற்கமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபாவை நட்ட ஈடாக செலுத்த வேண்டுமெனவும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் தலா 75 மில்லியன் ரூபாவையும் , முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ 50 மில்லியன் ரூபாவையும் , சிசிர மென்டிஸ் 10 மில்லியன் ரூபாவையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடாகச் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment