புனித ரமழான் காலத்தில் முஸ்லிம் அரசாங்க ஊழியர்கள் தொழுகை மற்றும் மத அனுஷ்டானங்களில் ஈடுபடுவதற்கு வசதியாக விசேட வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்துள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்துள்ளார்.
அது தொடர்பான அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை (04/2023) அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள், திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்கள், சபைகளின் தலைவர்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புனித ரமழான் நோன்பு இம்மாதம் 23ஆம் திகதி ஆரம்பமாகுமென எதிர்பார்க்கப்படுவதோடு, எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதி வரை இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இக்காலங்களில் அனைத்து முஸ்லிம் அரசாங்க அதிகாரிகள் தமது மத அனுஷ்டானங்களில் ஈடுபடுவதற்கு வசதியாக கால அட்டவணை தயாரித்தல், மற்றும் தவிர்க்க முடியாத வேளைகளில் மாத்திரம் விசேட விடுமுறை அனுமதித்தல் இந்த சுற்று நிருபத்திற்கிணங்க மேற்கொள்ள முடியும்.
அதே வேளை ரமழான் நிறைவுறுவதற்கு 14 தினங்களுக்கு முன்பதாக அரச சேவை கூட்டுத்தாபனம், மற்றும் அரச நிறுவனங்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு பண்டிகைக் கால முற்பணத்தை வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment