நீதிமன்றம் தடைகளை தகர்த்துள்ளதை கௌரமாக வரவேற்கிறோம் : அரசாங்கத்திற்கு 10 சதவீத மக்களாணை கூட கிடையாது - ஜி.எல். பீரிஸ் - News View

About Us

About Us

Breaking

Monday, March 6, 2023

நீதிமன்றம் தடைகளை தகர்த்துள்ளதை கௌரமாக வரவேற்கிறோம் : அரசாங்கத்திற்கு 10 சதவீத மக்களாணை கூட கிடையாது - ஜி.எல். பீரிஸ்

(இராஜதுரை ஹஷான்)

தேர்தலை நடத்த வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதி தீர்மானித்தால் ஜனநாயகம் மலினப்படுத்தப்படும். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட தடைகளை உயர் நீதிமன்றம் தகர்த்துள்ளதை கௌரமாக வரவேற்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் திங்கட்கிழமை (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கான நிதி விடுவிப்பு தொடர்பில் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால தடையுத்தரவை கௌரவமாக வரவேற்கிறோம்.

ஜனநாயக நாட்டில் உரிய காலத்திற்கு காலம் தேர்தல் முறையாக நடத்தப்பட வேண்டும். தேர்தலை நடத்த வேண்டுமா, இல்லையா என்பதை அரசியல்வாதிகளால் தீர்மானிக்க முடியாது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரத்தில் தலையிடவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

தேர்தல் செயற்பாடுகளுக்கு ஜனாதிபதிதான் ஆரம்பத்தில் இருந்து தடையேற்படுத்தி, அதன் பழியை அரச சேவையாளர்கள் மீது சுமத்தி, அரச சேவையாளர்களை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளன. மாற்று வழிகள் ஏதும் இல்லாத காரணத்தினால் அரசாங்கம் நிச்சயம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த நேரிடும்.

தேர்தலில் அரசாங்கம் படுதோல்வி அடைவது உறுதி என்பதால்தான் அரசாங்கம் தேர்தலை பிற்போட தொடர்ந்து முயற்சிக்கிறது.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திற்கு மொத்த சனத் தொகையில் 10 சதவீத மக்களாணை கூட கிடையாது என்பது கருத்து கணிப்புக்கள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தோல்வியை முன்னிலையில் வைத்துக் கொண்டு அரசாங்கம் தேர்தலில் போட்டியிடவுள்ளது.

No comments:

Post a Comment