இலங்கையில் 2021ஆம் ஆண்டில் பயங்கரவாதச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்ற போதிலும், அமெரிக்காவினால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மறுசீரமைக்கப்படுகின்றமை இன்னும் அச்சுறுத்தல் என்று இலங்கை அரசாங்கம் கருதுவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் நேற்று வெளியிடப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான பயங்கரவாதம் தொடர்பான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பயங்கரவாத எதிர்ப்பு திறன்களை மேம்படுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் பிற சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் இலங்கை தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதத்தின் எழுச்சி இலங்கையில் பாதுகாப்புக் அச்சுறுத்தலாக இருந்தாலும், விடுதலைப் புலிகளின் நீண்டகால செயற்பாடுகள் இலங்கையிலும் சர்வதேச அளவில் புலம்பெயர்ந்த நாடுகளிலும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் என்று இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் கவலை வெளியிடுகின்றனர்.
இந்த நிலையில், பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் இலங்கைக்கு எவ்வாறு ஆதரவளிப்பது என்பது குறித்து குவாட் நாடுகளான இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா என்பவற்றுடனும் ஒரே எண்ணத்தை கொண்ட பங்காளிகளுடனும் கலந்துரையாடியுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.'
2009 இல் இலங்கை அரசாங்கத்தால் இராணுவ ரீதியில் தோல்வியடைந்த போதிலும் விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆதரவாளர்கள் வலையமைப்பும் நிதி ஆதரவும் தொடர்கின்றது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
2009 முதல் விடுதலைப் புலிகள் அமைப்பு செயல்பாடின்றி உள்ளது. 2009 ஆம் ஆண்டின் பின்னர் விடுதலைப் புலிகள்அமைப்பு இலங்கையில் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் எந்த தாக்குதல்களும் இல்லை எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment