சர்வதேச நாணய நிதியம் வட்டி வீதங்களை அதிகரிக்குமாறு கோரிக்கை : ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய வங்கியிடமே வலியுறுத்த வேண்டும் - பந்துல குணவர்தன - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 28, 2023

சர்வதேச நாணய நிதியம் வட்டி வீதங்களை அதிகரிக்குமாறு கோரிக்கை : ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய வங்கியிடமே வலியுறுத்த வேண்டும் - பந்துல குணவர்தன

(எம்.மனோசித்ரா)

சர்வதேச நாணய நிதியத்துடனான அண்மைய பேச்சுவார்த்தைகளின்போது மீண்டும் 2.5 சதவீதத்தால் வட்டி வீதங்களை அதிகரிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் இலங்கை அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் வட்டி வீதங்களைக் குறைக்க முடியாது எனத் தெரிவித்த அவர், வங்கி வட்டி வீதங்களின் அடிப்படையிலேயே பண வீக்க வீதமும் உள்ளடங்கியுள்ளதால் அது நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதில் பங்களிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை இடம்பெற்றபோது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், வங்கி வட்டி வீதங்களை குறைப்பதாக சில அரசியல்வாதிகள் மக்களுக்கு உறுதிமொழியளிக்கின்றனர். அது அவர்கள் அறியாமையினால் வெளியிடும் கருத்தாகும்.

நிதி சட்டத்திற்கமைய வங்கி வட்டி வீதங்களை தீர்மானிப்பது மத்திய வங்கியாகும். மத்திய வங்கியின் நிதி சபையின் ஊடாக எடுக்கப்படும் தீர்மானத்திற்கமையவே கொள்கை ரீதியிலான வட்டி வீதம் மற்றும் வங்கி வட்டி வீதம் என்பன தீர்மானிக்கப்படுகின்றன.

அதற்கமைய பண வைப்பாளர்களுக்கான வட்டி வீதம் மத்திய வங்கியினாலேயே தீர்மானிக்கப்படுகிறது. திறைசேரியின் கடன் வழங்கல் செயற்பாடுகளின்போது வட்டி குறித்த தீர்மானங்களிலும் மத்திய வங்கியின் தலையீடு காணப்படும். மத்திய வங்கியின் வட்டி வீதமானது நாட்டின் பண வீக்க வீதத்துடன் பிணைந்தாகக் காணப்படுகிறது.

அதற்கமைய பண வீக்க வீதம் படிப்படியாக வீழ்ச்சியடையும்போது வட்டி வீதமும் வீழ்ச்சியடையும். ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களும் வங்கி வட்டி வீதங்களைக் குறைக்குமாறு அரசாங்கத்தையே வலியுறுத்துகின்றனர். அவ்வாறு அரசாங்கத்தினால் வட்டி வீதத்தினைக் குறைக்க முடியாது. நிதி ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான ஆயுதமாகவே மத்திய வங்கியினால் வங்கி வட்டி வீதம் பயன்படுத்தப்படுகிறது.

எனவே ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய வங்கியிடமே இதனை வலியுறுத்த வேண்டும். அண்மையில் சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின்போது மேலும் நூற்றுக்கு 2.5 சதவீதத்தினால் வட்டி வீதங்களை அதிகரிக்குமாறு வலியுறுத்தப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எவ்வாறிருப்பினும் இலங்கை தரப்பு அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை என்றார்.

No comments:

Post a Comment