நடமாடும் சேவையூடாக முட்டை விநியோகம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 28, 2022

நடமாடும் சேவையூடாக முட்டை விநியோகம்

(எம்.மனோசித்ரா)

கொழும்பு அண்மித்த பகுதிகள் மற்றும் கம்பஹா மாவட்டத்தில் 20 பிரதேசங்களில் லொறிகள் ஊடாக 55 ரூபாவிற்கு முட்டையை விநியோகிக்கும் நடவடிக்கைகள் புதன்கிழமை (28) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நுகர்வோரால் கொள்வனவு செய்ய முடியாதளவிற்கு முட்டை விலை தீவிரமாக அதிகரித்துள்ளமையின் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழிப் பண்ணையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

சந்தைகளில் அதிக விலைகளில் முட்டை விற்பனை செய்யப்படுகின்றமை மற்றும் முட்டைகளுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக நுகர்வோர் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். இந்த நெருக்கடிகள் தீவிரமடைந்தமையின் காரணமாக இந்த விவகாரம் நீதிமன்றம் வரை எடுத்துச் செல்லப்பட்டது.

இந்நிலையில் கடந்த 26 ஆம் திகதி விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் முட்டை உற்பத்தியாளர்களுக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, இடைத்தரகர்கள் இன்றி முட்டையை விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.

55 ரூபா அதிகபட்ச விலையின் கீழ் இவ்வாறு முட்டையை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதற்கமையவே நேற்றையதினம் 20 லொறிகள் ஊடாக கொழும்பை அண்மித்த பகுதிகளுக்கும், கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளுக்கும் முட்டை விநியோகிக்கப்பட்டது.

சுமார் 4 இலட்சம் முட்டைகள் இவ்வாறு விநியோகிக்கப்பட்டதாக அகில இலங்கை கோழிப் பண்ணையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

கோட்டை புகையிரத நிலையம், தெமட்டகொட, கொம்பனித்தெரு, தெஹிவளை, பத்தரமுல்ல, நுகேகொட, மஹரகம, மீகொட, நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம், ஹோமாகம, வத்தளை, ஜா-எல, றாகம, நீர்கொழும்பு, கிரிபத்கொட, கடவத்தை, பேலியகொட ஆகிய பகுதிகளில் நேற்றையதினம் இவ்வாறு 55 ரூபாவிற்கு முட்டை விநியோகிக்கப்பட்டது.

இது தொடர்பில் அகில இலங்கை கோழிப் பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவிக்கையில், சில மொத்த விற்பனையாளர்கள் எம்மிடம் 50 ரூபாவிற்கு முட்டையைக் கொள்வனவு செய்து, சில்லறை வியாபாரிகளுக்கு 60 ரூபாவிற்கு வழங்கியுள்ளனர்.

சில்லறை வியாபாரிகள் நுகர்வோருக்கு அதனை விட அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்கின்றனர். இதன் காரணமாக முட்டை உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களை பாதுகாப்பதற்காகவே லொறிகள் ஊடாக முட்டைகளை விநியோகிக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment