இலங்கையர் ஒருவர் 10,000 டொலர் பெறுமதியான இந்திய ரூபாவை (INR) வைத்திருக்க அனுமதிக்கும் புதிய ஒழுங்குமுறைக்கு இந்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய ரூபாவை வெளிநாட்டு நாணயமாக அனுமதிக்குமாறு இலங்கை விடுத்த கோரிக்கைக்கு, இந்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் நேற்று தெரிவித்தன.
ஆசிய நாடுகளில் இந்திய ரூபாவை பிரபலப்படுத்தவும், அமெரிக்க டொலரில் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வசிப்பவர்கள் இப்போது இந்திய ரூபாவை மற்றொரு நாணயமாக மாற்றிப் பயன்படுத்த முடியுமென்றும், இதை செயல்படுத்துவதற்கு, இலங்கையிலுள்ள வங்கிகள் இந்திய வங்கியுடன் (Nostro account) நொஸ்ட்ரோ கணக்குகளை” ஆரம்பிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டுமென்றும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
(நாஸ்ட்ரோ கணக்கு என்பது ஒரு வங்கி மற்றொரு வங்கியில் வெளிநாட்டு நாணயத்தில் வைத்திருக்கும் கணக்கைக் குறிக்கிறது)
இலங்கை வங்கிகளின் கடல் கடந்த வங்கி அலகுகள், (OBU) வதிவிடமில்லாதவர்களிடமிருந்தும் சேமிப்பு மற்றும் வைப்புகளை ஏற்க அனுமதிக்கப்பட்டுள்ளமை மற்றொரு முக்கியமான அம்சமாகுமென இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஊடக அறிக்கைகளின்படி, ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் பணம் அனுப்புதல் உட்பட அனைத்து நடப்புக் கணக்கு பரிவர்த்தனைகளும் இலங்கையில் வசிப்பவர்கள் மற்றும் வசிக்காதவர்களுக்கிடையில் மேற்கொள்ளப்படலாம்.
இந்த ஏற்பாட்டை சில மாதங்களுக்கு முன்னர் இந்தியா அங்கீகரித்த போதிலும், இலங்கை மத்திய வங்கி நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக ரூபாவை அறிவிக்கவில்லை.
No comments:
Post a Comment