(எம்.வை.எம்.சியாம்)
புத்தளத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வாகனம் மோதியதில் காயமடைந்த நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் திகதி இராஜாங்க அமைச்சரின் வாகனம் மோதுண்டு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் - குருநாகல் வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்து கொண்டிருந்த ஒருவர் மீது இராஜாங்க அமைச்சரின் வாகனம் மோதியதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் போது பலத்த காயமடைந்த நபர் முதலில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இருப்பினும் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முள்ளிபுரம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 48 வயதுடைய நபரே 15 நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் இராஜாங்க அமைச்சரின் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் மரணத்தையடுத்து வாகன சாரதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார்மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
No comments:
Post a Comment