நாளை சில அமைப்புகள் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளமை குறித்து இலங்கையின் பல வர்த்தக சம்மேளனங்கள் கரிசனை வெளியிட்டுள்ளன.
பேச்சு சுதந்திரம் கருத்துக்களை வெளியிடுவதற்கான உரிமைகளை அங்கீகரிக்கும் ஏற்றுக் கொள்ளும் அதேவேளை சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இந்த ஆர்ப்பாட்டங்களை கைவிடுமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்கின்றோம் என வர்த்தக சம்மேளனங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தருணத்தில் இடம்பெறும் ஸ்திரதன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையும் அதன் மூலம் வெளியாகக் கூடிய எதிர்மறையான தகவல்களும் சுற்றுலாத்துறையை ஊக்குவித்து பொருளாதாரத்திற்கு புத்துயிர் கொடுப்பதற்கான எந்த நடவடிக்கைகளிற்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தலாம் என இலங்கையின் வர்த்தக சம்மேளனங்கள் தெரிவித்துள்ளன.
சில விமான நிலையங்கள் இலங்கைக்கு மீண்டும் சேவைகளை ஆரம்பிக்க இணங்கியுள்ளன, குளிர்காலத்தில் ஐரோப்பாவில் எரிசக்திக்கான செலவு அதிகம் என்பதை கருத்தில் கொள்ளும்போது சுற்றுலாப் பயணிகளை கவருவதற்கான சிறந்த வாய்ப்பு இலங்கைக்கு உள்ளது, இது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் வீழ்ச்சியடைந்துள்ள விருந்தோம்பல் தொழில்துறைக்கு இது ஆதரவளிக்கும் என வர்த்தக சம்மேளனங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் எந்த ஸ்திரமின்மையும் ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு முதலீடுகளிற்கான வாய்ப்புகளை பாதிக்கலாம். எனவும் வர்த்தக சம்மேளனங்கள் தெரிவித்துள்ளன.
அனைத்து தரப்பினரையும் தங்கள் ஆற்றலையும் வளங்களையும் சாதகமான சீர்திருத்தங்களை நோக்கி பயன்படுத்துமாறும் பொருளாதாரத்தை பாதித்து பொதுமக்களிற்கு மேலும் சுமையை ஏற்படுத்தக் கூடிய நடவடிக்கைகளிற்கு பதில் ஒரு நாடாக எவ்வாறு மீள எழுவது என்பது குறித்து கவனம் செலுத்துமாறும் கேட்டுக் கொள்கின்றோம் எனவும் வர்த்தக சம்மேளனங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment