(இராஜதுரை ஹஷான்,எம்,ஆர்.எம்.வசீம்)
ஜனநாயகத்திற்கு எதிராக அரசாங்கம் வன்மையான முறையில் செயல்படுகிறது. மக்கள் தமது பிரதேசங்களில் இருந்து போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு அச்சமடைய வேண்டாம். மக்கள் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (24) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொழில்நுட்ப அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஸ்திரமான கொள்கை இல்லாமல் இந்த அரசாங்கம் செயற்படுகிறது.
எதிர்கால தலைமுறையினரது எதிர்காலம் இல்லாமல் போகுகிறது என்பதை நாட்டு மக்கள் இனியாவது விளங்கிக் கொள்ள வேண்டும்.
பாதுகாப்பு தரப்பினரும் அரசாங்கத்தின் முறையற்ற வகையில் செயற்பாடுகளுக்கு அகப்பட்டுள்ளார்கள்.
ஜனநாயக போராட்டத்தின் ஊடாகவே தீர்வு காண முடியும். மக்கள் போராட்டத்திற்கு ஊழல் அரசியல்வாதிகள் அச்சம் கொண்டுள்ளார்கள்.
காலி முகத்திடலிலும், கொழும்பிலும் போராட்டத்தில் ஈடுபட முடியாவிட்டால் பரவாயில்லை. பொதுமக்கள் தங்கள் பிரதேசங்களில் இருந்து போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு அச்சமடைய வேண்டாம். மக்கள் போராட்டம் நிச்சயம் பெற்றி பெறும்.
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் பொறுப்புடன் செயற்படவில்லை. புலனாய்வு பிரிவை மறுசீரமைக்க வேண்டும்.
அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு எதிரான அடக்குமுறையை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்துகிறேன் என்றார்.
No comments:
Post a Comment