கடன் வாங்கி நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கியதால் பொருளாதாரம் பாதிப்பு : போராட்டத்தினால் எமது கண்கள் திறக்கப்பட்டுள்ளன - மஹிந்தானந்த அளுத்கமகே - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 22, 2022

கடன் வாங்கி நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கியதால் பொருளாதாரம் பாதிப்பு : போராட்டத்தினால் எமது கண்கள் திறக்கப்பட்டுள்ளன - மஹிந்தானந்த அளுத்கமகே

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

தேர்தலை நடத்திய பின்னர் நாட்டுக்கு தடையின்றி டொலர் வருமாக இருந்தால் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். போராட்டத்தினால் எமது கண்கள் திறக்கப்பட்டுள்ளன. கடன் வாங்கி நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கியதால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஏழாம் நாள் விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது ஆனால் ஜனாதிபதி பொருளாதார பாதிப்பிற்கு நிலையான தீர்வு காண அவதானம் செலுத்தியுள்ளார்.

கடந்த காலங்களில் வரவு செலவுத் திட்டங்களில் கடன் பெற்று நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கியதால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜக்ஷ மற்றும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விமர்ச்சித்துக் கொண்டிப்பதை விடுத்து பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் கொள்கை அடிப்படையில் ஒன்றிணைய வேண்டும்.

சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களும் பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக்கூற வேண்டும்.

கொவிட் பெருந்தொற்று தாக்கம் பொருளாதார பாதிப்பை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கியது என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பொருளாதார பாதிப்புக்கும் தமக்கும் எவ்வித தொடர்பு இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பினரும், மக்கள் விடுதலை முன்னணியினரும் குறிப்பிட முடியாது, ஏனெனில் இவர்கள் அரசாங்கததில் அமைச்சு பதவிகளை வகிக்காவிட்டாலும், அரசாங்கங்களின் பங்குதாரர்களாக இருந்துள்ளார்கள்.

போராட்டத்தின் ஊடாக எமது கண்கள் திறக்கப்பட்டுள்ளன. அரசியல் ரீதியிலான தவறுகளை திருத்திக் கொண்டு தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என்பதில் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும். பொருளாதார நெருக்குடிக்கு பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு எட்டப்பட வேண்டும் என மக்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள்.

வரி அதிகரிப்பு ஊடாக அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்ள அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 20221 ஆம் ஆண்டு நாட்டின் மொத்த சனத் தொகையில் 25,462 பேர் மாத்திரமே குறைந்த பட்ச அளவு வருமான வரி செலுத்தியுள்ளார்கள்.1,50000 நிறுவனங்களில் 11051 நிறுவனங்கள் மாத்திரமே வருடாந்த வரி செலுத்தியுள்ளன.

வரி செலுத்துவதை தவிர்ப்பது பாரிய குற்றமாக கருதப்படாத காரணத்தினால் பெரும்பாலானோர் வரி செலுத்துவதை மதிப்பதில்லை. ஆகவே வருடாந்த வரி செலுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறோம்.

நாட்டில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் எதிர்தரப்பினர் தேர்தலை நடத்துமாறு கோருகிறார்கள். தேர்தலை நடத்தி புதிய அரசாங்கம் வந்தவுடன் நாட்டில் டொலர் பற்றாக்குறைக்கு தீர்வு காண முடியுமா, பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கு தேர்தலை நடத்த வேண்டிய தேவை கிடையாது.

ஆகவே தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் குறுகிய அரசியல் நோக்கத்தை இலக்காகக் கொண்டு செயற்படுவதை விடுத்து சகல தரப்பினம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். தேர்தலை நடத்திய பின்னர் நாட்டுக்கு தடையின்றி டொலர் வருமாக இருந்தால் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.

No comments:

Post a Comment