ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்திற்கான காரணம் என்ன ? அதில் கலந்துகொள்ளவிருப்போரின் நோக்கம் என்ன? நாடு ஸ்திரமடைவதை விரும்பாதோரே போராடுகின்றனர் என்கிறார் மனுஷ நாணயக்கார - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 1, 2022

ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்திற்கான காரணம் என்ன ? அதில் கலந்துகொள்ளவிருப்போரின் நோக்கம் என்ன? நாடு ஸ்திரமடைவதை விரும்பாதோரே போராடுகின்றனர் என்கிறார் மனுஷ நாணயக்கார

(நா.தனுஜா)

ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்திற்கான காரணம் என்ன ? அதில் கலந்துகொள்ளவிருப்போரின் நோக்கம் என்ன? பெற்றோல், எரிவாயு போன்றவற்றுக்கான வரிசைகள் இன்மை, உரப் பிரச்சினைக்கான தீர்வு, பாடசாலைகளின் மீள் திறப்பு, பொருட்களின் விலை குறைப்பு போன்றவற்றால் அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்களா ? என்று கேள்வி எழுப்பியுள்ள தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, கட்டமைப்பு ரீதியான மாற்றங்களின் ஊடாக நாடு மீண்டும் ஸ்திரப்படுத்தப்படுவதை விரும்பாதவர்களே வீதிக்கு இறங்கிப் போராடுகின்றனர் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (1) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, நடைபெறவுள்ள போராட்டம் தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதா ?' என்று ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் விளக்கமளித்திருப்பதாவது, ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்தினதும், அதற்கு வருகை தருபவர்களினதும் நோக்கம் என்ன? தற்போது பெற்றோல், எரிவாயு போன்றவற்றுக்கான வரிசைகள் இல்லாததனால் அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்களா?

பொருட்களின் விலைகள் ஒப்பீட்டளவில் குறைவடைந்திருப்பதனால் அவர்கள் துன்பப்படுகின்றார்களா?

நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டிருப்பதனால் ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றனவா?

அதேபோன்று உரத்தின் விலை குறைவடைந்து, உரப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டிருப்பதனால் ஏதேனும் பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளனவா?

சுற்றுலாப் பயணிகள் மீண்டும் நாட்டிற்கு வருகை தர ஆரம்பித்திருப்பது நெருக்கடிக்குரிய விடயமாகத் தென்படுகின்றதா?

இவற்றில் எக்காரணங்களுக்காகப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது என்பது குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டது.

மிதமிஞ்சிய வரிச் சலுகைகள் உள்ளடங்கலாகக் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சில தவறான தீர்மானங்களினால் தற்போது நாட்டின் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அவற்றைச் சீர் செய்து, நாட்டை மீண்டும் ஸ்திரநிலைக்குக் கொண்டுவருவதற்கு நாம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் பிரச்சினைக்குரியவையாக இருக்கின்றனவா?

நாட்டை மீளக்கட்டியெழுப்புவதை முன்னிறுத்திச் செயலாற்றுவதில் ஏதேனும் தவறிருக்கின்றதா?

தற்போது கட்டமைப்பு ரீதியான மாற்றத்தை (சிஸ்டம் சேஞ்ச்) ஏற்படுத்துவதற்கு விரும்பாதவர்களே வீதிக்கு இறங்கிப் போராடுகின்றார்கள்.

அண்மையில் வரி அறவீடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் திருத்தங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கின்றது.

பணம் இருப்பவர்களிடம் வரியை அறவிட்டு, பணம் இல்லாதவர்களுக்கு அவசியமான சேவையை வழங்கி, சமூகத்தில் உரியவாறான சமநிலையை ஏற்படுத்தக் கூடிய கட்டமைப்பு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.

அதேபோன்று அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

இவை நாட்டின் மீட்சியையும், அபிவிருத்தியையும் நோக்கிய கடினமான பயணத்தின் முதற்கட்ட நகர்வேயாகும்.

அந்த வகையில் கட்டமைப்பு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவதையும், அதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதையும் இலக்காகக் கொண்டு அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என்று விளக்கமளித்துள்ளார்.

No comments:

Post a Comment