(எம்.எப்.எம்.பஸீர்)
தேசிய பாதுகாப்பு தொடர்பிலான கற்கைகள் நிலையத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகமும், பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராகவும் செயற்பட்ட பேராசிரியர் ரொஹான் குணரத்ன மற்றும் தேசிய உளவுச் சேவை பிரதானியாக செயற்பட்ட மேஜர் ஜெனரால் சுரேஷ் சலே ஆகியோரை எதிர்வரும் ஜனவரி மாதம் கொழும்பு மேல் நீதிமன்ற, சிறப்பு ட்ரயல் அட்பார் முன் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் 25 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் தாக்கல் செய்துள்ள வழக்கு, விசாரணைகளுக்காக எதிர்வரும் ஜனவரி மாதம் 4, 5 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில், அவ்விரு தினங்களிலும் அவ்விருவரும் மன்றில் ஆஜராக வேண்டும் என சிறப்பு ட்ரயல் அட் பார் நீதிமன்றம் நேற்று (24) உத்தரவிட்டது.
அவ்விருவரும் குறித்த வழக்கின் முதலாம், 2 ஆம் சாட்சியாளர்கள் என்ற ரீதியில் இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த குண்டுத் தாக்குதல் தொடர்பிலான விவகாரத்தை விசாரிக்கவென நியமிக்கப்பட்டுள்ள, கொழும்பு மேல் நீதிமன்றின் தலைமை நீதிபதி தமித் தொடவத்த தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகளான அமல் ரணராஜ மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகியோர் அடங்கிய சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ற குழாம் இதற்கான அறிவித்தலை பிறப்பித்தது.
No comments:
Post a Comment