(எம்.மனோசித்ரா)
நாட்டு மக்கள் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக் கொள்வதில் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், அரசாங்கம் அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக இந்திய கடன் திட்டத்தின் கீழ் பொலிஸ் ஜீப் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஆனால் இணக்கப்பாடு மாத்திரமே எட்டப்பட்டுள்ளதாகவும், பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் முறையாக இடம்பெறவில்லை என்பது இந்த இரு வேறுபட்ட நிலைப்பாடுகளிலிருந்தும் தெளிவாகிறது.
நாட்டில் தற்போது அரசியல் ஸ்திரமற்ற நிலைமையே காணப்படுகிறது. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அது தொடர்பில் கவனம் செலுத்தாமல், ராஜபக்ஷாக்களை ஸ்திரப்படுத்துவதிலேயே அவதானம் செலுத்தி வருகின்றார். இதன் காரணமாகவே தேர்தல் முறைமையைக் காரணம் காட்டி, உள்ளுராட்சித் தேர்தலை மேலும் காலம் தாழ்த்த முயற்சிக்கின்றனர்.
மக்களின் எழுச்சியை அடக்குமுறைகளால் முடக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், மக்கள் மத்தியில் கோபமும் அதிருப்தியும் மேலும் மேலும் அதிகரிக்கும். அவ்வாறு கோபம் அதிகரிக்கும் போது தோன்றும் எழுச்சிளை அரசாங்கத்தால் எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியாது.
கடந்த மாதங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது காலாவதியான கண்ணீர்ப்புகைப் பிரயோகிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது அரசாங்கம் மேலும் அதன் பாதுகாப்பை அதிகரித்துக் கொள்வதற்காக கடன் திட்டத்தின் கீழ் இந்தியாவிலிருந்து பொலிஸ் ஜீப் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்யவுள்ளதாக தெரியவந்துள்ளது.
மக்களின் போராட்டங்களை மேலும் தீவிரமாக்குவதற்காகவே அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது என்றார்.
No comments:
Post a Comment