(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)
நாட்டின் பிரதமர் பதவியை ஏற்றுக் காெள்ளுமாறு கோட்டாபய ராஜபக்ஷ் அடிக்கடி கோரி வந்ததாலேயே எமது கூட்டணியின் இணக்கப்பாட்டில் நிபந்தனைகளுடன் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளத் தயார் என தெரிவித்தோம். அவ்வாறு இல்லாமல் கேட்டுச் செல்லவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) விசேட கூற்றொன்றை முன்வைத்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கு நான் அனுப்பிய கடிதம் தொடா்பில் சபையில் திரிபுபடுத்தப்பட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன, குறித்த கடிதம் நான் தனியாக எழுதியது அல்ல. எமது பாராளுமன்ற குழு மற்றும் எமது கூட்டணியின் புரிந்துணர்வுடன் எழுதப்பட்ட கடிதமாகும்.
நாட்டின் பிரதமர் பதவியை பொறுப்பெடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கடிதம் மூலமும் வேறு தகவல்கள் ஊடாகவும் அடிக்கடி வேண்டிக் கொண்டிருந்தார். அவரின் இந்த கோரிக்கைக்கு வாய் மூலம் பதில் வழங்குவதை விட எழுது மூலம் வழங்குவதே சிறந்தது என நினைத்தே கடிதம் எழுதினோம்.
அத்துடன் இடைக்கால அரசாங்கம் அமைப்பதற்கு 4 நிபந்தனைகளை கடிதத்தில் குறிப்பிட்டிருந்தோம்.
அதாவது, குறிப்பிட்ட கால வரையறைக்குள் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதற்கு இணங்க வேண்டும்.
இரண்டு வாரங்களுக்கு அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்புடன் அரசியலமைப்பின் 19ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
எங்களால் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் 21ஆம் திருத்தம் ஊடாக நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரத்தை இல்லாதாெழிப்பதற்காக குறிப்பிட்ட காலத்துக்குள் அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்புடன் செயற்படுத்த இணங்க வேண்டும்.
மக்களின் வாழ்வாதாரத்தை சுமுகமான நிலைக்குகொண்டுவந்து சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்திக் கொண்டு, குறிப்பிட்ட அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொண்ட பின்னர் நிலையான அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்காக பாராளுமன்ற தேர்தலை நடத்த இணக்கம் தெரிவிக்க வேண்டும் என்ற மககள் மயமிக்க இந்த 4 நிபந்தனைகளையுமே முன்வைத்தோம்.
அவ்வாறு இல்லாமல் எனக்கு பிரதமர் பதவியை வழங்குமாறு நான் கேட்டுச் செல்லவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.
No comments:
Post a Comment