நிந்தவூரில் கலப்பட பசளை தயாரிப்பு நிலையம் சுற்றி வளைப்பு : விற்பனைக்குத் தயாராகவிருந்த 181 கலப்பட உரப் பொதிகள் மீட்பு : உலர வைத்த உப்புடன் கையும் களவுமாக சிக்கின - News View

About Us

About Us

Breaking

Thursday, November 24, 2022

நிந்தவூரில் கலப்பட பசளை தயாரிப்பு நிலையம் சுற்றி வளைப்பு : விற்பனைக்குத் தயாராகவிருந்த 181 கலப்பட உரப் பொதிகள் மீட்பு : உலர வைத்த உப்புடன் கையும் களவுமாக சிக்கின

பாறுக் ஷிஹான்

நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டப்பள்ளம் பிரதேசத்திலுள்ள அரிசி ஆலையொன்றில் மறைத்து வைத்து கலப்படம் செய்யப்பட்ட 1.5 டொன் எடையுள்ள போலி இரசாயனப் பசளைகளை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் இன்று 2022.11.24ம் திகதி மதியம் இடம்பெற்றுள்ளது. அக்கரைப்பற்று இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலையடுத்து இராணுவப் புலனாய்வு பிரிவினருடன் திருக்கோயில் விசேட அதிரடிப்படை அதிகாரி ஐ.பி.கன்னங்கர தலைமையிலான குழுவினரே குறித்த பிரதேசத்தில் பதுங்கி இருந்து இச்சுற்றி வளைப்பை மேற்கொண்டனர்.

இத்திடீர் சுற்றிவளைப்பின் போது, MOP எனும் பெயரில் போலியாக கலப்படம் செய்து விற்பனைக்கு பொதி செய்யப்பட்டுக் கொண்டிருந்த கலப்படமான இரசாயனப் பசளைகளை அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுமதியளிக்கப்பட்ட பசளையுடன் உப்பு மற்றும் இதர பொருட்களை சட்டவிரோதமாகக் கலந்து பொதி செய்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்திலேயே இவர்கள் கையும் மெய்யுமாக கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த சட்டவிரோத பசளையும் கைப்பற்றப்பட்டு களஞ்சியசாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இச்சட்டவிரோத இரசாயனப் பசளை கலவை நிலையமானது கல்முனை குடியைச் சேர்ந்த நபருக்குச் சொந்தமான அரிசி ஆலை என தெரிய வந்துள்ளது.

இதில் உப்பு கலக்கப்படாத 50 கிலோ பொதி கொண்ட 92 MOP பசளை பொதிகளும், உப்புக்கலப்படம் செய்து விற்பனைக்குத் தயாராகவிருந்த 181 பொதிகளும் கைப்பற்றப்பட்டதுடன், உற்பத்தி செய்யப்படும் நிலையிலிருந்த சுமார் 150 இற்கும் அதிகமான பைகள் மதிக்கத்தக்க உப்பு மற்றும் MOP பசளை கலந்த குவியல்களும் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், உலர வைக்கப்பட்டுள்ள உப்பு மற்றும் MOP பசளைகளிலிருந்து சராசரியாக 500 பொதிகள் பொதியிட முடியும் எனவும் பாதுகாப்புத் துறையினர் தெரிவித்தனர்.

அத்துடன், இங்கு போலியாக கலப்படம் செய்யப்படும் பசளைகளை பொதி செய்வதற்காக அரச இலட்சினை பொறிக்கப்பட்டு தயார் நிலையிலிருந்த பக்கெட்டுகளும் பசளை பேக்களும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐவரையும் சட்டவிரோத பசளையையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இப்பிரதேசத்தில் போலியான இரசாயன பசளைகளை விவசாயிகளுக்கு வழங்கி, கொள்ளை இலாபமடையும் நோக்கில் இம்மோசடி இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment