தமிழ் அரசியல் கைதியான பொருளியலாளர் சிவலிங்கம் ஆரூரன் எழுதிய 'ஆதுரசாலை' என்ற தமிழ் நாவலுக்கு சிறந்த நாவலுக்கான விருது வழங்கப்பட்டது.
கொழும்பில் நேற்றுமுன்தினம் (28) நடைபெற்ற 65ஆவது அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்விலேயே அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு - பித்தளை சந்தியில் 2006ம் ஆண்டு அப்போதைய பாதுகாப்புச் செயலாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷ மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிவலிங்கம் ஆரூரன் மகசின் சிறையில் தற்போதும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்.
இந்நிலையில் சிறையில் இருந்தவாறே, புத்தகமொன்றை எழுதியமைக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறைச்சாலையில் இருந்தவாறே, சிவலிங்கம் ஆருரன் ஒரு ஆங்கில நூல் உள்ளிட்ட 8 புத்தகங்களை எழுதியுள்ளார்.
மேலும் அவர் எழுதிய இந்த 08 புத்தகங்களும், அரச இலக்கிய விருது வழங்கும் விழாவுக்கு, பரிந்துரை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் அவர் 2016ஆம் ஆண்டு எழுதிய நாவலுக்கும் அரச இலக்கிய விருது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வடமராட்சி திக்கத்தை சேர்ந்த இவர், மொரட்டுவப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டதாரியாவார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பைத் முன்னெடுத்து வந்த நிலையில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
மகசின் சிறைச்சாலை சிரேஷ்ட அத்தியட்சகர் ஜகத் வீரசிங்கவின் பாதுகாப்புக்கு மத்தியில் பரிசளிப்பு விழாவிற்கு அழைத்து வரப்பட்ட அவர், புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவிடமிருந்து அவருக்கான விருதைப் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் அவரது பெற்றோரும் கலந்து கொண்டனர். சிவலிங்கம் ஆரூரனின் தந்தை ஒரு விமானப் பொறியியலாளர் என்பதும் குறிப்பிடத்கதக்கது.
No comments:
Post a Comment