சஹ்ரானின் மனைவியின் ஒப்புதல் வாக்குமூலம் : நவம்பரில் பிணை குறித்த தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 1, 2022

சஹ்ரானின் மனைவியின் ஒப்புதல் வாக்குமூலம் : நவம்பரில் பிணை குறித்த தீர்மானம்

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களுக்கு தலைமை வகித்ததாக கூறப்படும் பிரதான தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹஷீமின், மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா வழங்கியுள்ள குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தின் சுயாதீனத் தன்மை குறித்து தீர்மானிக்க உண்மை விளம்பல் விசாரணை ஒன்றினை முன்னெடுக்க கல்முனை மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் 8 ஆம் அத்தியாயத்தின் கீழ் கோட்டை நீதிவானிடம் வழங்கப்பட்டுள்ள குறித்த ஒப்புதல் வாக்கு மூலத்தின் சுயாதீனத் தன்மையை, அப்துல் காதர் பாத்திமா ஹாதியா சார்பில் மன்றில் ஆஜராகும் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் சவாலுக்கு உட்படுத்திய நிலையிலேயே, இந்த உண்மை விளம்பல் விசாரணையை முன்னெடுக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அவ்வாறான விசாரணை ஒன்றுக்கு, வழக்குத் தொடுநர் சட்டமா அதிபர் தரப்பும் எதிர்ப்பு வெளியிடாத நிலையில், இந்த வழக்கில் ஒரே ஒரு சான்றான ஒப்புதல் வாக்கு மூலம் தொடர்பில் உண்மை விளம்பல் விசாரணையை முன்னெடுக்க நீதிமன்றம் தீர்மானிப்பதாக கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ட்ரொஸ்கி அறிவித்தார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதிக்கும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சாரா ஜஸ்மின் என்றழைக்கப்பட்ட புலஸ்தினி மகேந்திரன் என்பவர் வெடி பொருட்களை தயாரித்தமை மற்றும் அவற்றை சேகரித்து வைத்திருந்தமை தொடர்பில் நிந்தவூரில் வைத்து அறிந்திருந்தும் (சாரா ஜெஸ்மின் தெரிவித்தன் ஊடாக ), அந்த தகவலை பொலிஸாருக்கு அறிவிக்காமை குறித்து பாத்திமா ஹாதியாவுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் 5 ஆம் அத்தியாயத்தின் அ, ஆ பிரிவுகளின் கீழ் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எச்.சி. 653/ 21 எனும் குறித்த குற்றப் பகிர்வுப் பத்திரம் கடந்த 2021 நவம்பர் 12 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த குற்றப் பகிர்வுப் பத்திரத்தில், கோட்டை முன்னாள் நீதிவான் ரங்க திஸாநாயக்க, சி.ஐ.டி. அதிகாரிகள், ஒரு இராணுவ வீரர் உள்ளடங்களாக 30 சாட்சியாளர்கள் பட்டியலிடப்பட்டுள்ளதுடன், சான்றாவணமாக ஒரே ஒரு ஒப்புதல் வாக்கு மூலம் மட்டும் நிரலிடப்பட்டுள்ளது.

இது குறித்த வழக்கு, கல்முனை மேல் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயராம் ட்ரொஸ்கி முன்னிலையில் நேற்று ( 30) முன் விளக்க மாநாட்டுக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த முன் விளக்க மாநாட்டின் போது, வழக்குத் தொடுநரால் முன்மொழியப்பட்ட ஏற்புகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது வழக்குத் தொடுநரால் 24 ஏற்புகள் முன் மொழியப்பட்ட போதும் அதில் பெரும்பாலானாவையை ஏற்க பிரதிவாதி தரப்பு இணங்கவில்லை.

பாத்திமா ஹாதியா பயங்கர்வாத தடைச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் கீழ் வழங்கிய வாக்குமூலங்கள் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளமையை பிரதிவாதி தரப்பு ஏற்றுக் கொண்ட போதும், அவ்வாறு வழங்கப்பட்ட வாக்குமூலங்கள் சி.ஐ.டி.யினரின் அச்சுறுத்தல், வாக்குறுதி அல்லது வேறு சட்டவிரோதமாக ஏற்படுத்தப்பட்ட எதிர்பார்ப்புகளின் நிமித்தம் வழங்கப்பட்டதாகவும் அந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் சுயவிருப்பின் பேரில் வழங்கப்படவில்லை எனவும் பிரதிவாதி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியிலேயேயே நீதிமன்றம் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் தொடர்பில் உண்மை விளம்பல் விசாரணையினை முன்னெடுக்க தீர்மானித்தது.

இதேவேளை நேற்று முன்தினம், பிரதிவாதி பாத்திமா ஹாதியா சார்பில் பிணை கோரிக்கையும் முன் வைக்கப்பட்டது. அது குறித்து ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள எழுத்து மூல சமர்ப்பணங்களை மையப்படுத்தி, அவரை பிணையில் விடுவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. நீண்ட காலமாக (மூன்று வருடங்கள் 5 மாதங்கள்) தடுப்புக் காவல் அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை, விஷேட காரணிகளை மையப்படுத்தி இந்த பிணை கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த கோரிக்கை தொடர்பில் வழக்குத் தொடுநரால் தமது ஆட்சேபனைகளை எழுத்து மூலமாக சமர்பிப்பதற்கு தவணை கோரப்பட்ட நிலையில், அதற்கான அவகாசம் வழங்கப்பட்டது.

இதனையடுத்து, இது குறித்த வழக்கு மேலதிக முன் விளக்க மாநாடு தொடர்பிலும், பிணை தொடர்பிலான தீர்மானத்துக்காகவும் எதிர்வரும் நவம்பர் மாதம் 18 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

வழக்குத் தொடுநர் சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுஹர்ஷி ஹேரத் தலைமையில், அரச சட்டவாதிகளான சத்துரி விஜேசூரிய, மாதினி விக்னேஷ்வரன் ஆகியோரும் பிரதிவாதிக்காக சிரேஷ்ட சட்டத்தரண் ருஷ்தி ஹபீப் தலைமையின் சட்டத்தரணி ரிஸ்வான் உவைஸ் உள்ளிட்ட குழுவினரும் மன்றில் ஆஜராகினர்.

No comments:

Post a Comment