அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டால் நாட்டில் மீண்டும் பிரிவினைவாதம் தலைதூக்கும், ஆகவே அரசியலமைப்பு திருத்தம் அவசியமற்றது - சாகர காரியவசம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 11, 2022

அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டால் நாட்டில் மீண்டும் பிரிவினைவாதம் தலைதூக்கும், ஆகவே அரசியலமைப்பு திருத்தம் அவசியமற்றது - சாகர காரியவசம்

 

(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டால் நாட்டில் மீண்டும் பிரிவினைவாதம் தலைதூக்கும். ஆகவே அரசியலமைப்பு திருத்தம் அவசியமற்றது. புதிய அரசியலமைப்பை உருவாக்க முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் திங்கட்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. எவரது தேவைக்காக அரசியலமைப்பு திருத்தம் செய்ய அக்கறை கொள்ளப்படுகிறது என்பதை அறிய முடியவில்லை. அரசியலமைப்பு திருத்தம் முத்துறைகளுடன் தொடர்புடையது. ஆகவே அரசியலமைப்பு திருத்தம் நாட்டுக்கு பொருந்தும் வகையில் அமைய வேண்டும்.

தற்போது நடைமுறையில் உள்ள இரண்டாவது அரசியலமைப்பு யாப்பு இதுவரை 20 முறை சீர்திருத்தங்களுக்கு உள்ளாகியுள்ளது.

அரசியலமைப்பு தொடர்பில் நாட்டு மக்கள் மத்தியில் மாறுப்பட்ட நிலைப்பாடு காணப்படுகிறது. அரசியலமைப்பின் 13ஆவது திருத்த்தின் ஊடாக மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட போது ஒரு தரப்பினர் அதற்கு எதிராக நீதிமன்றம் சென்றார்கள்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை அமுலில் இருக்கும் வரை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என குறிப்பிடப்பட்டது, அதற்கமைய இதுவரை காலமும் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் ஊடாக நாட்டின் அரச தலைவர் யார் என்ற பிரச்சினை காணப்பட்டது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் பாராளுமன்றத்துக்கு பொறுப்பாக்கப்பட்டதால், தேசிய பாதுகாப்பு அலட்சியப்படுத்தப்பட்டது, அதன் விளைவு பாரதூரமானதாக அமைந்தது.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை இரத்து செய்து, நாட்;டுக்கு பொருந்தும் வகையில் அரசியலமைப்பை இயற்றுமாறு நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்தார்கள். அதற்காகவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையில் அரசாங்கத்தை உருவாக்கி, மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கினார்கள்.

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை இரத்து செய்து, 20ஆவது திருத்தச் சட்டத்தை அறிமுகம் செய்தோம், அத்துடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதை விடுத்து தற்போத அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

19ஆவது திருத்தத்தில் பாராளுமன்றத்துக்கும், நிறைவேற்று அதிகாரத்துக்கும் முரண்பாட்டை தோற்றுவித்ததை போன்று 22ஆவது திருத்தத்திலும் இவ்விரு பிரதான துறைகளுக்குமிடையில் முரன்பாட்டை தோற்றுவிக்க குறுகிய தரப்பினரால் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டால் நாட்டில் மீண்டும் பிரிவினைவாதம் தலைதூக்கும், ஆகவே அரசியலமைப்பு திருத்தம் அவசியமற்றது, புதிய அரசியலமைப்பை உருவாக்க முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையிலான குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு நீதியமைச்சிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment