களுத்துறையில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் கூட்டம் நகைப்புக்குரியது : நான் 20 க்கு ஆதரவளிக்காதவன், அந்த திருத்தம் நீக்கப்பட வேண்டும் - மைத்திரிபால - News View

About Us

About Us

Breaking

Sunday, October 9, 2022

களுத்துறையில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் கூட்டம் நகைப்புக்குரியது : நான் 20 க்கு ஆதரவளிக்காதவன், அந்த திருத்தம் நீக்கப்பட வேண்டும் - மைத்திரிபால

(எம். மனோசித்ரா)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களுத்துறையில் புதிய பயணத்தை ஆரம்பிப்பதற்கான கூட்டத்தை நடத்தியமை நகைப்புக்குரிய விடயமாகும். அது செயற்கையான ஏற்பாடுமாகும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அத்தோடு பிற்போடப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் மேலும் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்படக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலன்னறுவையில் ஞாயிற்றுக்கிழமை (9) இடம்பெற்ற மத வழிபாடுகளில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் எந்த மட்டத்தில் பாராளுமன்றத்தினுள் விவாதத்துக்கு உட்படுத்தப்படும் என்பதை எம்மால் ஸ்திரமாக கூற முடியாது.

22ஆவது திருத்தம் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில் தற்போது பிற்போடப்பட்டுள்ளது. சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, காலம் தாழ்த்தப்பட்டுள்ளமையினால், அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படக்கூடும்.

எனினும், அவை எவ்வாறானவையாக காணப்படும் என்று எம்மால் கூற முடியாது. எவ்வாறிருப்பினும், திருத்தங்கள் ஜனநாயக ரீதியானவையாக காணப்பட வேண்டும். நான் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்காதவன். அந்த திருத்தம் நீக்கப்பட வேண்டும்.

எனது ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட 19ஆவது திருத்தம் அதேபோன்று மீண்டும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதிலும் சில குறைபாடுகள் காணப்பட்டன. அந்தக் குறைபாடுகளும் நீக்கப்பட்டு 19ஆவது திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும்.

நாட்டு மக்கள் அனைத்து வழிகளிலும் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், அனைவரும் இணைந்து மக்கள் சார்பில் செயற்பட வேண்டும்.

எமது கட்சியிலிருந்து வேறு எவரேனும் அமைச்சுப் பதவிகளை ஏற்கவுள்ளனரா என்பது எனக்கு தெரியாது. ஆனால், நான் ஒருபோதும் அமைச்சுப் பதவிகளை ஏற்கப் போவதில்லை.

எனவே, சர்வ கட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை. சர்வ கட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டால் பெருமளவில் சர்வதேச உதவிகள் கிடைக்கப் பெறும். எவ்வாறிருப்பினும், அதற்கு ஆளுங்கட்சி விரும்பவில்லை.

எனவே, கட்சி என்ற ரீதியில் எம்மால் அரசாங்கத்துடன் இணைய முடியாது. எனினும், மக்களின் நன்மைக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பினை வழங்குவோம்.

மேலும், களுத்துறையில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் கூட்டம் நகைப்புக்குரியதாகும். இது செயற்கையானதொரு சம்பவமாகும் என்றார்.

No comments:

Post a Comment