பொதுஜன பெரமுன முன்னெடுத்த திட்டங்களின் பலனை நாட்டு மக்கள் முழுமையாக பெற்றுக் கொண்டுள்ளார்கள் - சாகர காரியவசம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 28, 2022

பொதுஜன பெரமுன முன்னெடுத்த திட்டங்களின் பலனை நாட்டு மக்கள் முழுமையாக பெற்றுக் கொண்டுள்ளார்கள் - சாகர காரியவசம்

(இராஜதுரை ஹஷான்)

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு பொருளாதார மீட்சிக்கான இறுதி மற்றும் முழுமையான தீர்வல்ல. தேசிய உற்பத்திகளை மேம்படுத்த பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்த திட்டங்களின் பலனை நாட்டு மக்கள் முழுமையாக பெற்றுக் கொண்டுள்ளார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

குறுகிய அரசியல் கொள்கை மற்றும் ஊழல் மோசடியாளர்களுடன் இனி ஒருபோதும் ஒன்றிணையப்போவதில்லை. நாட்டு மக்கள் அங்கிகரிக்கும் தரப்பினருடன் வெகுவிரைவில் கூட்டணியை ஸ்தாபிப்போம் எனவும் குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பொருளாதார நெருக்கடிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாத்திரம் பொறுப்புக்கூற வேண்டும் என்று குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதுவரை ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களும் பொறுப்புக்கூற வேண்டும். தேசிய உற்பத்தியை மேம்படுத்த பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்த திட்டத்தின் பெறுபேற்றை நாட்டு மக்கள் தற்போது முழுமையாக பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு பொருளாதார மீட்சிக்கான இறுதி மற்றும் முழுமையான தீர்வல்ல, நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளாமல் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண உரிய திட்டங்களை செயற்படுத்தினோம். இருப்பினும் பல்வேறு காரணிகளினால் திட்டங்களை வெற்றி பெற செய்ய முடியாமல் போனது.

தேசிய உற்பத்திகள் மற்றும் தொழிற்துறையை மேம்படுத்தினால் மாத்திரமே பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வு காண முடியும். தேசிய தொழிற்துறையை வெகுவிரைவில் மேம்படுத்துவோம். அரசாங்கம் மாற்றமடையும் போது பொருளாதார கொள்கைகள் மாற்றமடையாமலிருக்க எதிர்வரும் காலங்களில் சட்ட ரீதியில் உறுதிப்பாடு எட்டப்படும்.

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகித்த தரப்பினர்தான் தற்போது கூட்டணியில் இருந்து விலகி பொதுஜன பெரமுனவின் தலைவர்களையும், கடந்த அரசாங்கத்தையும் விமர்சித்துக் கொள்கிறார்கள். இவ்வாறான சந்தர்ப்பவாதிகளுக்கு நாட்டு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

குறுகிய அரசியல் நோக்கமுடையவர்கள் மற்றும் ஊழல்வாதிகளுடன் இனியொருபோதும் ஒன்றிணையப்போவதில்லை. மக்கள் அங்கிகரிக்கும் தரப்பினருடன் கூட்டணியை வெகுவிரைவில் ஸ்தாபிப்போம் என்றார்.

No comments:

Post a Comment