(எம்.வை.எம்.சியாம்)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கே தேசிய சபை அமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் திருடர்களை பாதுகாக்கும் அமைப்பே தேசிய சபை என்றும் இதனூடாக ஜனாதிபதியின் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக பின்பக்கத்தில் இருந்து யார் ஆதரவு வழங்குகிறார்கள் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்.
வியாழக்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார்.
அது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நாட்டு மக்களுக்கு அரசாங்கம் செய்தி ஒன்றை கூறுவதற்கு முற்படுகிறது. அதாவது பொருளாதார நெருக்கடிகள் காரணமாக நாட்டு மக்கள் முகங்கொடுத்த பிரச்சனைகள் தற்போதைய அரசாங்கத்தினால் தீர்க்கப்பட்டுள்ளது என்று.
இந்நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவின் உரையொன்றினை செவிமடுத்தேன். அதில் அவர் நாட்டில் நீண்ட எரிபொருள் வரிசைகள், எரிவாயு வரிசைகள் இல்லாமல் போயுள்ளது.
மேலும் பல மணி நேர மின் வெட்டு தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் யார்? தற்போதைய அரசாங்கத்தினாலேயே இப்பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளது என்கிறார். இது வேடிக்கையான விடயமாகும்.
மேலும் அம்பாந்தோட்டையில் மந்த போசனையால் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று செய்திகள் வெளிவர ஆரம்பித்த பின்னர் நாமல் ராஜபக்ஷ நடுங்கிறார். அம்பாந்தோட்டையிலேயே மந்த போசனையால் சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று கூறும் போது நாமல் ராஜபக்ஷ மாத்திரம் அல்ல முழு ராஜபக்ஷ குடும்பமே நடுங்க வேண்டும்.
மேலும் எமக்கு அரசாங்கத்திடம் இருந்து தேசிய சபையில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. எங்களுக்கு ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட முடியாது. திருடர்களை பாதுகாக்கும் அமைப்பே இந்த தேசிய சபை.
எனவே நாம் பொதுமக்களுக்கு ஒரு விடயத்தை கூறுகின்றோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் ஐக்கிய மக்கள் சக்தி மக்களுடைய கடமைகளை நிறைவேற்ற முன் நின்று செயல்படும்.
ரணில் விக்ரமசிங்கவை எதிர்த்து அவருடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக பின்பகத்தில் இருந்து யார் ஆதரவு வழங்குகிறார்கள் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment