இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு, ரஷ்ய விமானத்திற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவு நீக்கம் - News View

About Us

About Us

Breaking

Monday, June 6, 2022

இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு, ரஷ்ய விமானத்திற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவு நீக்கம்

ரஷ்ய விமானம் இலங்கையிலிருந்து வெளியேறுவதைத் தடுக்கும் தடை உத்தரவை இடைநிறுத்துமாறு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்றையதினம் (06) சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் மனுவை பரிசீலித்த கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி ஹர்ஷ சேதுங்க குறித்த உத்தரவு வழங்கியுள்ளார்.

191 பயணிகள் மற்றும் 13 பணியாளர்களுடன் கடந்த ஜூன் 02 ஆம் திகதி கட்டுநாயக்க, (BIA) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ரஷ்யாவின் மொஸ்கோ நகரிற்கு புறப்படவிருந்த ரஷ்ய விமானசேவையான Aeroflot இற்குச் சொந்தமான விமானம், கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவின் பேரில் நாட்டிலிருந்து செல்ல அன்றையதினம் (02) இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

அயர்லாந்து நிறுவனமான Celestial Aviation Trading 10 Limited நிறுவனம் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இம்மாதம் 16ஆம் திகதி வரை குறித்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து தங்களது விமானம் தடுத்து வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அதிருப்தியை வெளியிட்ட ரஷ்யாவின் Aeroflot விமான சேவை, இலங்கைக்கான அனைத்து விமான சேவைகளை இடைநிறுத்துவதாகவும், அனைத்து விமான பயணச்சீட்டு விநியோகத்தையும் இடைநிறுத்துவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏரோஃப்ளோட்- ரஷ்ய விமான சேவை மற்றும் எயார்போர்ட் அண்ட் ஏவியேஷன் சர்வீசஸ் (ஶ்ரீ லங்கா) (பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தின் Air Navigation Services தலைவரினால் (2ஆவது பிரதிவாதி) முன்வைக்கப்பட்ட மனு ஜூன் 03ஆம் திகதி கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தினால் விசாரிக்கப்பட்டது.

Aeroflot - Russian Airlines மற்றும் Celestial Aviation Trading 10 Limited (வாதி) இடையே, வணிக ரீதியான கொடுக்கல் வாங்கல் பிரச்சினையே காணப்படுவதாகவும், இது குறித்த இரண்டு தரப்பினரும் தீர்க்க வேண்டுமெனவும், அது தொடர்பில் அரசின் தலையீடு வலியுறுத்தப்படவில்லை என்பதும் இதன்போது குறிப்பிடப்பட்டது.

எவ்வாறாயினும், குறித்த தடை உத்தரவின் மூலம் இரு அரசாங்கங்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கருத்திற்கொண்டு, சட்ட மா அதிபர் இன்றையதினம் (06) கொழும்பு வர்த்தக நீதிமன்றத்தில் விளக்கங்களை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து தற்போது குறித்த தடையுத்தரவு நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment